Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்குமா அல்லது நரம்பு மண்டல பாதிப்பா... என்னுடைய இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீள்வது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

உங்களைப் போல கேள்வி கேட்பவர்கள் பலரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வதில்லை. மாறாக, நீங்களாகவே உங்கள் பிரச்னைக்கு ஒரு காரணத்தை யோசித்துக் கொள்வதும், சுய மருத்துவம் செய்துகொள்வதும் வேதனைக்குரிய விஷயம்.
உங்களுடைய கேள்வியில் நரம்பு பாதிப்பு (nerve damage), வைட்டமின் பி12 குறைபாடு (B12 deficiency), இதை எப்படிக் கையாள்வது?, இது மோசமானால் என்ன செய்வது? என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கேட்டுள்ளீர்கள். இந்தப் பிரச்னைகளுக்காக நீங்கள் மருத்துவரை அணுகினீர்களா என்று தெரியவில்லை. அடுத்தவர் சொல்வது, ஃபார்வேர்டு மெசேஜில் கேட்டது போன்றவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு நீங்களாகவே இப்படியெல்லாம் சந்தேகப்படுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
இருப்பினும், இது போன்ற பாதிப்புகள் இருந்தால், கால்களில் உள்ள தமனி (artery) எனப்படும் நல்ல ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை 'டாப்ளர்' (Doppler) பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் கால் நுனிவிரல் வரை சரியாகச் செல்கிறதா என்பதை டாப்ளர் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலே முக்கால்வாசி பிரச்னை தெளிவுபட்டுவிடும்.

அதற்குப் பிறகுதான் நரம்பு சேதம், வைட்டமின் பி12 குறைபாடு போன்ற பிற காரணங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணரை (vascular surgeon) அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் (Diabetes), வைட்டமின் பி 12 மற்றும் பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு, ரத்த ஓட்டக் குறைபாடு (Peripheral Artery Disease) போன்றவை இருந்தால் நரம்பு பாதிப்பும் இருக்கக்கூடும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல கால்களில் குடைச்சல் உணர்வு, மரத்துப் போவது அல்லது வலி தொடர்ந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாகும்.
டாக்டர் அருணாசலம்:
32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment