Doctor Vikatan: எங்கேயாவது இடித்துக்கொண்டாலோ, அடிபட்டாலோ அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது... சில நேரம் அங்கே ரத்தம் கட்டிக் கொள்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்... அப்படியே விடலாமா... சிகிச்சை தேவையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
உடலில் அடிபடும் போது, அந்தப் பகுதியில் உள்ள சருமம், அதற்குக் கீழுள்ள கொழுப்பு, தசை மற்றும் எலும்பு போன்ற உடற்கூறியல் அமைப்புகள் (Anatomical structures) பாதிக்கப்படுகின்றன. அடிபட்டவுடன் இந்த அமைப்புகள் சிதைவடையக்கூடும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கும்.
சருமத்துக்கு அடியில் கசியும் ரத்தம், மற்ற இடங்களுக்குப் பரவ முடியாமல் ஓரிடத்தில் தேங்கும்போது வீக்கம் உண்டாகிறது. ரத்தம் மட்டுமன்றி, செல்களுக்கு இடையே உள்ள நீர் (Intercellular fluid), சிதைந்த செல் சுவர்கள் வழியாக வெளியேறி செல்களுக்குள் (Intracellular fluid) சேர்வதாலும் வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் என்பது அடிபட்ட காயம் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டும் ஓர் அறிகுறியாகும். இதனை ஆங்கிலத்தில் 'இன்ஃப்ளமேஷன்' (Inflammation) என்று சொல்கிறோம். அடிபட்ட இடத்தில் வலி, அந்த இடம் சிவப்பு நிறமாக மாறுதல் மற்றும் ரத்தக்கட்டு ஆகியவையும் இதன் கூறுகளே.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலி நிவாரணிகள் பெரும்பாலும் 'Anti-inflammatory' மருந்துகளாகவே செயல்படுகின்றன. இவை செல்கள் மற்றும் ரத்தக் குழாய்களுக்கு இடையே தேங்கியுள்ள நீர் மற்றும் ரத்தக்கட்டைச் சரி செய்ய உதவுகின்றன. உடைந்த சாலையைச் சீரமைப்பது போல, ரத்தம் வழியாகக் கழிவுகள் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட திசுக்களை உடல் தானாகவே சரி செய்யத் தொடங்கும்.
முட்டிகளுக்குக் கீழே ரத்தம் கட்டியிருந்தால், நீர் மேலே ஏற முடியாமல், பாதம் பெரிதாக வீங்கத் தொடங்கும். எனவே, கால்களை உயர்த்திவைத்து, அந்த நீர் உடலுக்குள் இறங்குவதற்கு வழி செய்ய வேண்டும். மாத்திரையானது வீக்கத்தைக் குறைத்து, அங்குள்ள கெட்டுப்போன தசைகள், சிதைந்துபோன தசைகள், கெமிக்கல் போன்றவற்றை நீராக மாற்றும். அது ரத்தக் குழாய்கள் மூலம் உடலுக்குள் வரும். அது சுத்திகரிக்கப்பட்டு கல்லீரல், சிறுநீரகங்கள், உணவுக்குழாய் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப்படும்.
வீக்கம் வந்தால் 'RICE' முதலுதவி முறையைப் பின்பற்ற வேண்டும்.
R - Raise (உயர்த்துதல்): அடிபட்ட இடத்தை இதயத்தின் மட்டத்திற்கு மேலே உயர்த்தி வைக்க வேண்டும். உதாரணமாக, காலில் அடிபட்டால் காலை உயர்த்தி வைப்பதன் மூலம் தேங்கியுள்ள நீர் மற்றும் ரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்ல உதவும்.
I - Ice (ஐஸ் கட்டிகள்): அடிபட்ட முதல் ஐந்து நாள்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. இது ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
C - Compression (அழுத்தம்): பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப் போடுவதன் மூலம் வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
E - Elevation (உயரம்): அடிபட்ட பகுதியைத் தொடர்ந்து உயர்த்தி வைத்திருப்பது அவசியம்.
மேற்குறிப்பிட்ட முதலுதவிகளுடன், மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்வது ரத்தக்கட்டு விரைவில் கரையவும், சீழ்ப் பிடிக்காமல் இருக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக இந்த எல்லா விஷயங்களும் குணமடையும் செயல்முறைக்கு பொதுவாக 7 முதல் 14 நாள்கள் வரை ஆகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment