'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அதே அளவு முக்கியம். சரியான பத்தியம் இல்லாமல் மருந்து எடுத்தால், மருந்தின் வீரியம் குறையலாம் என்பதே சித்த மருத்துவ நிபுணர்கள் கூறும் பொதுக் கருத்து.
அது ஏன்.. அது உண்மையா என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா...
ஏன் இறைச்சியை தவிர்க்கவேண்டும் ?
சித்த மருந்துகளை உட்கொள்ளும் காலத்தில் சில உணவுகளைத் தவிர்க்கவும், சிலவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுவது வழக்கம்.
காரணம், சில உணவுப் பொருட்கள் மருந்தின் செயல்திறனை குறைக்கக்கூடும், மேலும் ஒவ்வாத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
சித்த மருந்துகள் பெரும்பாலும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. மருந்துகளுடன் இறைச்சி சேர்க்கும் போது அவற்றில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், அவற்றை மிகுதியாக உட்கொண்டால் சிறுநீரகம் செயல்பாட்டில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மருந்துகள் உடலில் இருந்து வெளியேறுவதும் சிறுநீரக செயல்பாட்டுடன் தொடர்புடையதே.
மேலும் மூளை மற்றும் இதய இரத்தகுழாய்களில் அடைப்புகளை உண்டாக்கி அவற்றையும் பாதிக்கக்கூடும்.
எந்த இறைச்சியை தவிர்க்க வேண்டும்?
சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் பொதுவாக கீழ்க்கண்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது:
கோழிக்கறி
கடல் நண்டு
செம்மறி ஆட்டிறைச்சி
மாட்டிறைச்சி
ஊர்ப்பன்றி
சிலவகை மீன் வகைகள் (இறால், கருவாவல், உழுவை, வாளை, கெளுத்தி மீன், நெய் தோலி)
இவை உடலில் வெப்பம், அழற்சி மற்றும் ஒவ்வாமை உண்டாக்கும் என்பதால், பத்திய காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
'இந்த' இறைச்சிகளைச் சாப்பிடலாம்!
பத்திய காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட ஒவ்வாமை ஏற்படுத்தாத இறைச்சி வகைகளை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அவை...
வெள்ளாட்டுக்கறி (மெலிந்த பகுதி)
கருங்கோழி
காணாங்கோழி
காடை
கௌதாரி
சிறிய வகை மீன்கள் (நெத்திலி, சுதும்பு, வெள்ளைவாவல், பேராரால், சன்னக்கூனி, விரால், அயிரை மீன்)
இவற்றை கறியாக அல்லாமல் சூப் வடிவில் எடுத்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.
எந்த நோய்களுக்கு இறைச்சி தவிர்க்க வேண்டும்?
எல்லா நோய்களுக்கும் இறைச்சி முற்றிலும் தடை இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்தே பத்தியம் மாறும்.
சரும நோய்கள் (Skin diseases), பெரும்பாலான சுரங்கள், அழற்சி அதிகம் உள்ள நோய்கள், கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்கள், சிலவகை மூட்டு நோய்கள் (gout) இறைச்சி சாப்பிட்டால் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
Comments
Post a Comment