Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன?
- மல்லிகா அன்பழகன். சென்னை
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
மூளைச் சாவு என்பது, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவரது மூளை மீளமுடியாத அளவிற்குப் பாதிப்படைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் ஒரு நிலை.
இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், மீள முடியாதபடி மூளை செயலிழந்து போன நிலையே மூளைச் சாவு.
மூளைச் சாவு அடைந்த ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பார். சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் போன்ற உயிர்நாடிச் செயல்பாடுகளைப் பராமரிக்க அவருக்கு முழுமையான மருத்துவக் கருவிகளின் ஆதரவு தேவைப்படும்.
இந்தச் சூழலில், செயற்கை ஆதரவு நடவடிக்கைகள் மூலம் ரத்த அழுத்தமும் சுவாசமும் பராமரிக்கப்படுவதால், இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற மற்ற உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் காரணமாக இதயம் தொடர்ந்து துடிக்கும், சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும்.
அவரது மூளை, மீளமுடியாத அளவிற்குச் சேதமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதால் (அதாவது அந்த நபர் மீண்டும் சுயநினைவு பெறவோ அல்லது மருத்துவ ஆதரவு இன்றி உயிர்வாழவோ வாய்ப்பில்லை என்பதால்), அவரின் மற்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவை இருக்கும் நோயாளிகளுக்கு (உதாரணத்துக்கு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு) பொருத்தப்படுகின்றன.
உயிர் பிரிந்தபிறகு, மண்ணில் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் உடல் உறுப்புகள், இப்படி ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேலான நபர்களுக்குப் புதிய வாழ்வை வழங்கப் பயன்படுத்தப்படுவது மிக நல்ல விஷயம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment