பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின்பற்றும் வழக்கம் கொண்டவராம் அந்தப் பெண். இத்தனையையும் தாண்டி, அவருக்கு கேன்சர் பாதிக்கக் காரணம் என்ன தெரியுமா?
அலுவலகத்தில் நிலவும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் டார்கெட்டை அடைய வேண்டிய அழுத்தம்... இவற்றால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமே கேன்சருக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்வது, இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்துவிட்டு, தாமதமாகவும் மிகக் குறைவாகவும் தூங்குவது போன்றவையும் காரணங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திய அந்தப் பெண், மன ஆரோக்கியத்தை (Mental Health) கவனிக்கத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வெறும் உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமே ஒருவரை நோயிலிருந்து காக்காது.
மன அழுத்தம் (Stress) என்பது உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டைச் சிதைத்து, புற்றுநோய் செல்கள் வளர வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுவலக வேலைக்கும் பர்சனல் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை (Work-life balance) பேணுவது மிக அவசியம்.
ஆரோக்கியமான உடல் என்பது அமைதியான மனதில்தான் தொடங்குகிறது என்ற அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும் நிலையில், அதீத வேலைச்சுமை, அதனால் ஏற்படும் மன அழுத்தம் எல்லாம் புற்றுநோய்க்குக் காரணமாகுமா....?
சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமாரிடம் பேசினோம்.
''ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்தாலும், அவை ஒருவருக்கு முழுமையான நோய் எதிர்ப்பாற்றலை (Immunity) உறுதி செய்வதில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மன அழுத்தம்...'' என்று எச்சரித்து ஆரம்பிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார். மன அழுத்தத்துக்கும் புற்றுநோய்க்குமான தொடர்பு குறித்தும் விளக்குகிறார் அவர்.
''நீண்ட கால மன அழுத்தம், உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கார்டிசால் (Cortisol) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதால், அது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், இது உடலில் தேவையற்ற அழற்சியை (Inflammation) உண்டாக்கி, செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
நம் உடலில் உருவாகும் அசாதாரணமான அல்லது புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதே நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வேலை. ஆனால், மன அழுத்தத்தால் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், இந்தச் செல்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறது. இதனால் புற்றுநோய் செல்கள் தடையின்றி பெருகத் தொடங்குகின்றன.
தொடர்ச்சியான மன அழுத்தம், உடலில் எதிர்மறையான உயிரியல் சூழலை உருவாக்குகிறது. இந்தச் சூழல், புற்றுநோய் செல்கள் வளர்வதற்கும், உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதற்கும் மிகவும் சாதகமாக அமைந்துவிடுகிறது.
எந்தப் புற்றுநோயையும் முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான நபர்கள் 45 வயதிலிருந்தும், குடும்பப் பின்னணியில் புற்றுநோய் அபாயம் உள்ளவர்கள், 20 அல்லது 30 வயதிலிருந்தும் பரிசோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.
உடல் ஆரோக்கியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அக்கறையை, மனநலனுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைமுறை, வொர்க்-லைஃப் பேலன்ஸைப் பழகுவது போன்றவற்றை இனியாவது சீரியஸாகப் பின்பற்றுங்கள்....''
-மீண்டும் எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் கிருஷ்ணகுமார்.
Comments
Post a Comment