''சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையில கிடைச்சதைத் தூக்கி வீசறேன். பிள்ளைங்களை அடிச்சுட்டு, அப்புறம் நானே அழறேன். இது தப்புன்னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியலை'' - பெரும்பாலானவர்கள் புலம்பும் வார்த்தைகள் இவை.
''கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு. தேவையான ஒரு எமோஷனல் ஃபீலிங்'' என்கிறார், சென்னையின் மூத்த மனநல மருத்துவ நிபுணரான எம். திருநாவுக்கரசு.

'கோபத்தால் ஏற்படும் விளைவு, நல்லதாக மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாததாக இருந்தால், அது ஆரோக்கியமான கோபம். உதாரணத்துக்கு, 'மகன் சரியாகப் படிக்கவில்லை; வேலையைச் செய்யவில்லை; நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை; என்றால், அப்போது வரும் கோபத்தின் விளைவுகள் யார்மேல் கோபப்படுகிறோமோ அவர்களுக்கு ஆதாயமாகத்தான் இருக்குமே தவிர, பாதிப்பை ஏற்படுத்தாது.
அடுத்தவர் பற்றி கவலையின்றி, எதற்கெடுத்தாலும் கத்துவது, ஆரோக்கியமில்லாத கோபம். உதாரணத்துக்கு, 'எனக்கு நல்லதே நடக்கலை, எந்த லாபமும் கிடைக்கலை' என்பதற்காக பிறரிடம் கோபம் கொள்வது அறியாமை, இயலாமை, பதற்றம், செய்தத் தவறை மறைக்க கோபப்படுவது மோசமானது. எல்லோருமே இந்த ஆத்திரத்தை 'கோபம்’ என்று எடுத்துக்கொள்கிறார்கள்.
கோபிப்பதற்கே வசதி வாய்ப்பு தேவைப்படுகிறது. ஒருவர், தன்னுடைய அலுவலகத்தின் மேலாளரிடமோ, உரிமையாளரிடமோ அல்லது மாநிலத்தை ஆளும் முதல்வரிடமோ கோபத்தைக் காட்ட முடியுமா? வசதி வாய்ப்பை பொறுத்து, எங்கு வெளிப்படுத்த முடியுமோ அங்குதான் கோபத்தைக் காட்டமுடியும்.
'இனி உங்கள் தயவு தேவை இல்லை’ என்றால் அவரிடத்தில் கோபப்படுவது பிரச்னையைத் தராது. ஒருவரின் தயவு தேவையாக இருக்கும்போது, அந்த நபரிடம் கோபப்படுவது பெரும் பாதிப்பைத்தான் தரும். அதை மீறியும் கோவித்துக்கொள்கிறவனுக்கு, அறிவு கம்மியாக இருக்கும்; அல்லது அவன் குழந்தையாக இருக்கவேண்டும்; அல்லது மனநலம் குன்றியவனாக இருக்கவேண்டும்.
கோபத்தைக் குறைப்பது எப்படி; கோபம் இல்லாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் சாத்தியப்படாத ஒன்று. கோபத்தை எப்படி வழி நடத்தவேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம்.

* கோபத்தை உறவு முறைகளிடம் வெளிப்படுத்துதல்:
தவிர்க்கக்கூடிய உறவுகளிடம் கோபத்தை வெளிப்படுத்தும்போது பெரிய பாதிப்பு வராது. ஆனால், நெருங்கிய உறவுகள் எனில், நிச்சயம் பாதிப்பு ஏற்படும். உறவே முறிந்தும் விடலாம்.
* உரிமை உள்ள இடத்தில் வெளிப்படுத்துதல்:
குடும்பத்துக்குள் ஒருவர் கோபப்படும்போது, 'உரிமை இருப்பதால்தானே கோவிக்கிறார்!’ என்று எடுத்துக் கொள்வதில்லை. குடும்பத்தில் கணவனோ, மனைவியோ, 'நம்மிடம்தானே கத்த முடியும்’ என்று ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு சமாளிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். ஒரே சமயத்தில் கணவன் - மனைவி இருவரும் கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். இதனால், அந்த இடத்தில் உடனடியாக கோபம் தனிந்து சுமூகமான மனநிலை நிலவும்.'' என்றார்.
சேலம் நியூரோ ஃபவுண்டேஷனைச் சேர்ந்த மனநல மருத்துவர் சி.பாஸ்கர், கோபத்துக்கான சில காரணங்களை பகிர்ந்து கொண்டார்.
''மகிழ்ச்சி, துக்கம், பயம் போன்று கோபமும் மூளையின் ஒரு வெளிப்பாடுதான். மூளையிலுள்ள 'அமைக்தலா’(Amygdala) எனும் பகுதியில் ஏற்படும் ரசாயனங்களின் மாற்றத்தால் கோபம் உண்டாகிறது. கோப உணர்ச்சி, அளவுக்கு மீறும்போதும் பிரச்னையாகிறது.
'ஈ.க்யூ’ (Emotional Quotient) என்பது, உணர்ச்சிகளைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் விகிதத்தைக் குறிக்கும். இந்த 'ஈ.க்யூ’ அதிகமாக இருப்பவர்கள், எப்போதும் கூலாக இருப்பார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளும் சரியாக இருக்கும்.

கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி கோபம் வந்தால், அதை ஒரு நோயாகக் கருதி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் மற்றும் யோகா, இதமான இசையைக் கேட்பது, புத்தகம் படிப்பது எனப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இப்படி நம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியதைக் கடைப்பிடித்தால், கோபத்தால் வரும் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன வருத்த நோய், மனப் பதற்றநோய், மனச் சிதைவு நோய் போன்ற பல நோய், கிட்ட நெருங்காது'' என்கிறார்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/ParthibanKanavuAudioBook

Comments
Post a Comment