Skip to main content

``விரலில் வலி" சிகிச்சைக்கு சென்ற சிறுவன்... காலையே இழந்த சோகம்..! மருத்துவமனையில் நடந்தது என்ன?

கால் விரலில் வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் காலையே இழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் எஸ். சின்னையா. இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறார். இவரின் கால் விரலில் வலி என்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களை சின்னையாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

பாதிக்கப்பட்ட சிறுவன்

"கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி என் மகனின் இடது கால் விரலில் வலி ஏற்பட்டதால் ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றோம். பரிசோதித்த மருத்தவர் இது நரம்பு தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்பதால், அது தொடர்பான சிறப்பு மருத்துவரிடம் செல்லப் பரிந்துரைத்தார்.

அதற்குப் பின் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்றோம். அங்கு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் பாலச்சந்தர் என்பவர் ஆதம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த மருத்துவமனையான 'மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை'க்கு சிகிச்சைக்கு அழைத்து வரும்படி தெரிவித்தார்.

சிறுவனின் தந்தை சின்னையா

இதனையடுத்து ஏப்ரல் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அந்த மருத்துவமனைக்கு என் மகனை அழைத்துச் சென்றோம். என் மகனைப் பரிசோதித்த மருத்தவர் சரவணன், காலில் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் என்றும் கூறி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்துள்ளார்.  சிகிச்சைக்குப் பிறகு என் மகனின் கால் கறுப்பாக மாறியது. மருத்துவரிடம் கேட்டபோது, காலில் வேறொரு பிரச்னை இருக்கிறது, மற்றோர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

அடுத்து அந்த அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு என் மகனின் கால் மூட்டுக்கு கீழ் கட்டி ஒன்று உருவானது. அந்தக் கட்டியை நீக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு தினங்களில் என் மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், உயிரைக் காப்பாற்ற காலை அகற்றியாக வேண்டும் என மருத்துவர் சரவணன் எங்களிடம் தெரிவித்தார். பதறிப்போன நானும், என் மனைவியும் சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டோம். இதனையடுத்து, என் மகனின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூட்டிலிருந்து பாதம் வரை அகற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுவன்

முழுவதும் குணப்படுத்திவிடுவோம் என ஆசைகாட்டி ஒவ்வொரு முறையும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். கால் விரலில் வலி என போனதற்கு மொத்தம் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். காலை எடுக்கும் முன்பு தனி அறையில் எங்களை உட்கார வைத்து, பொறுமையாகப் பேசினார். சிகிச்சை முடிந்த பிறகு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சரியாக வரவில்லை. ஆஞ்சியோ சிகிச்சையின்போதே ஏதோ தவறு நடந்திருக்கிறது. மருத்துவர் அதனை மறைக்கிறார் என்று தோன்றுகிறது.

பிரச்னை பெரிதாக ஆகிவிடக்கூடாது என்பதால் கால் அறுவை சிகிச்சைக்கான செலவை மருத்துவமனையே ஏற்பதாகவும், மருந்துகளுக்கு உண்டான பணத்தை மட்டும் பொறுமையாக செலுத்துமாறும் எங்களிடம் மருத்துவர் சரவணண் தெரிவித்தார். மகனின் இந்த நிலைமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்தோம்.

மருத்துவர் சரவணன் பாலச்சந்தர்

இந்நிலையில் மருத்துவர் சரவணண் என்னைத் தொடர்புகொண்டு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு தருவதாகத் தெரிவித்தார். அதை வேண்டாம் என்று மறுக்கவே, மீண்டும் ஒரு லட்சம் தருகிறேன் என்றும் தெரிவித்தார். நாங்கள் அதை வாங்க மறுத்துவிட்டோம்.

அவர் நஷ்டஈடு தருவதாகத் தெரிவித்துவிட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் நானும் என்னுடைய உறவினரும் பணம் கேட்டு மிரட்டுவதாக மருத்துவர் புகாரளித்தார். இதனையடுத்து நாங்களும் எங்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். மேலும், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை தலைமை அலுவலகத்திலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களிடமும் நேரிலும் மனு கொடுத்தோம். அரசு செலவில் சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்வதாக அமைச்சரும் தெரிவித்திருக்கிறார்'' என்றார்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் ஜெ ராஜமூர்த்தி

இந்நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் ஆதம்பாக்கத்தில் உள்ள மவுன்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய மருத்துவ வசதிகள் இல்லையென்றும், வருகைப் பதிவுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மருத்துவர் ஜெ ராஜமூர்த்தியிடம் பேசினோம். "அந்த மருத்துவமனையை ஆய்வுசெய்து தற்காலிகமாக அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளோம்.

எங்கள் இயக்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு 7 நாள்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு பெற வேண்டும் என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என்று தெரிவித்தார்.

medical

இதுபற்றி விளக்கம் கேட்க மருத்துவமனைக்கு இரண்டு முறை நேரில் சென்றோம். யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவரை போனில் தொடர்புகொண்டபோது பிறகு பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார். மீண்டும் தொடர்புகொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. மருத்துவர் தரப்பில் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...