Skip to main content

Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்.... சிகிச்சை தேவைப்படுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்       

ஸ்பூர்த்தி அருண்

இதை மருத்துவமொழியில் 'கோல்டு இன்டாலரென்ஸ்' (Cold intolerance) என்று சொல்வோம்.  இந்தப் பிரச்னை உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாது. 

உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் 'ஹைப்போதெர்மியா' ( Hypothermia) பிரச்னையும் இதுவும் வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமாக உடலின் கொழுப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தால், இப்படி உணரலாம். அதாவது நம் சருமத்தின் அடியில் சப்கியூட்டேனியஸ் கொழுப்பு என ஒன்று இருக்கும். 

ஏசி செய்யப்பட்ட இடம்

அதுதான் உடல்வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது.  இது குறைவாக இருந்தால் அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகலாம். குளிர்ச்சியான சூழல்களில் இருந்து பழக்கமில்லாதவர்களுக்கும் இப்படி நிகழலாம். திடீரென அப்படிப்பட்ட சூழலில் இருக்க வேண்டி வரும்போது ஆரம்பத்தில் சில நாள்களுக்கு அப்படித்தான் இருக்கும். பழகப் பழக உடல் அந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ளும்.

அனோரெக்ஸியா என்ற உணவுக்குறைபாடு பிரச்னை சிலருக்கு இருக்கலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும். அதனால் உணவு விஷயத்தில் அதிதீவிர எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள்.  இதனாலும் அவர்களது உடலில் கொழுப்பு அளவு குறைந்து, அதன் தொடர்ச்சியாக குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.

ரத்தச்சோகை

அடுத்த காரணம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை.  அதாவது ரத்தச்சோகை காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதனாலும் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். இரும்புச்சத்துக் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ரத்தச்சோகை வரும். அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.

தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை 'ரேனாட்ஸ் டிசீஸ்' (Raynaud's disease) என்று சொல்வோம்.

தைராய்டு

இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...