Skip to main content

பெண்களே உஷார்; அதிகரித்து வரும் எம்.எஸ் பாதிப்பு; காரணமும் தீர்வும்! #WorldMultipleSclerosisDay

வேகமாக முன்னேறி வரும் மருத்துவ வளர்ச்சி, வாழ்நாள் மீதான நம்பிக்கையையும், நோய்களுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்துகின்றன. அந்த வகையில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்ட 'Multiple Sclerosis' எனப்படும் நரம்பியல் நோய், மருத்துவ முன்னேற்றத்தால் சமீப காலமாக இந்தியாவிலும் பரவலாகக் கண்டுபிடிக்கப்படுகிறது.

Multiple Sclerosis

மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள், நரம்பு மண்டலத்தின் வழியாகவே உடல் உறுப்புகளின் தசைகளுக்குச் சென்று சேரும். உடல் இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, அதன்மூலம் உடல் இயக்கத்தை முடக்கும் வீரியம் கொண்டது Multiple Sclerosis எனப்படும் 'எம்.எஸ்' பாதிப்பு. கேட்கவே அதிர்ச்சியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் 'ஷாக்கைக் குறைச்சுக்கிட்டு அச்சமின்றி வாழலாம்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இந்த நோய் குறித்த விழிப்புணர்வுக்காக மே 30-ம் தேதி 'சர்வதேச Multiple Sclerosis தின'மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இந்த நோய் குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் வெங்கட்ராமன்.

'Multiple Sclerosis' என்றால் என்ன?

``நம் உடலில் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மைக் காக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி, தவறுதலாக நம் நரம்பு மண்டலத்தைக் கிருமி மாதிரியாகவோ அல்லது அந்நியமாகவோ பாவித்து, நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து பாதிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுதான் 'Multiple Sclerosis' எனப்படும். ஒருமுறை இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தால், அறிகுறிகள் தெரியாத வகையிலும், வெளிப்படையான அறிகுறிகளுடனும் தொடர்ந்து இந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.

Multiple Sclerosis

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குளிர்ப்பிரதேச நாட்டினருக்குத்தான் 'எம்.எஸ்' பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது.

இந்தியாவில் பொதுமக்களிடம் மட்டுமன்றி, மருத்துவத்துறை வட்டாரத்திலும்கூட இந்த பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இந்த நோய் பற்றியும், 'எம்.எஸ்' பாதிப்பு வந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை வழிமுறைகள் குறித்தும் முறையாகத் தெரிந்து கொண்டால், இந்த நோயை அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.

`எம்.எஸ்' பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

* நம் மூளை நரம்புகளைச் சுற்றி, மையிலின் (Myelin) எனப்படும் பாதுகாப்பு உறை செயல்படும். இந்த உறையை அந்நியமாக நினைத்து, உடலைத் தாக்கும் எதிர்ப்பு அணுக்கள் 'மையிலின்' உறையைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் நரம்பு மண்டலத்தில் 'எம்.எஸ்' பாதிப்பு ஆரம்பமாகிறது.

* இ.பி.வி எனப்படும் (Epstein – Barr Virus) வைரஸ், குழந்தைப் பருவம் மற்றும் வளரிளம் பருவத்தில் நம் உடலில் நுழையும்பட்சத்தில், அது தூண்டிவிட்டுச் செல்லும் தாக்கம் 'எம்.எஸ்' பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் கிருமி உடலிலிருந்து மறைந்தாலும்கூட, அது வந்து சென்ற தாக்கத்தினால் பிற்காலத்திலும் 'எம்.எஸ்' பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Multiple Sclerosis

* இந்த நோய் ஏற்படுவதற்கு ‘வைட்டமின் டி’ குறைபாடும் முக்கிய காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால், குளிர்ப்பிரதேச நாடுகளில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

* 'நமக்கு ஆண்டு முழுக்க வெயில் சீராக இருப்பதால், இந்தியாவில் 'எம்.எஸ்' பாதிப்பு அதிகம் வர வாய்ப்பில்லைதானே?’ என்று பலரும் நினைக்கலாம். ஆனால், இந்தியாவில் ‘வைட்டமின் டி’ குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சூரிய வெளிச்சமே படாத வகையில் பலரின் வாழ்வியல் முறைகள் மாறிவருவது, புதுப்புது நோய் பாதிப்புகள் ஏற்பட காரணமாகின்றன. இதனாலும் நம் நாட்டில் 'எம்.எஸ்' பாதிப்பால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

* உணவுப் பழக்கம், தூக்கம், வாழ்வியல் முறைகள் போன்றவை சீரற்ற முறையில் இருக்கும்போது, குடலில் இருக்கும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் அழிந்துபோக வாய்ப்புள்ளன. இந்த நுண்ணுயிரிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையேயான தொடர்பு, இயல்புக்கு மாறாக எதிரெதிர் நோக்கத்துடன் வேலை செய்யும்போது, உடலுக்குக் கிடைக்க வேண்டிய எதிர்ப்பு சக்தி உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதுவும், 'எம்.எஸ்' பாதிப்பை உருவாக்கும் வைரஸ் கிருமிகளின் வரவுக்குக் காரணமாகலாம்.

எந்த வயதினரைத் தாக்கும்?

பெரும்பாலான நோய்கள் 50 வயதினரைக் கடந்தவர்களுக்குத் தான் ஏற்படும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அதனால், இளம்பருவத்தினர் நோய் பாதிப்புகள் குறித்து அஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால், இந்த 'எம்.எஸ்' பாதிப்பானது 20 – 40 வயதினரைத்தான் பெரிதும் தாக்குகிறது.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில், 80 சதவிகிதத்தினர் பெண்களாகவும், 20 சதவிகிதத்தினர் ஆண்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பெண்களைத் தாக்கும் நோயாக இது இருந்தாலும், முன்னெச்சரிக்கை விஷயத்தில் ஆண்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Multiple Sclerosis

`எம்.எஸ்' பாதிப்புக்கான அறிகுறிகள்?

* வெளிப்படையான அறிகுறிகளுடன் 'எம்.எஸ்' பாதிப்பின் தாக்கம் இருக்கும்பட்சத்தில், மூளை, மூளையிலிருந்து வரும் தண்டுவடம், கண் நரம்புகள் மற்றும் முதுகுத் தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

* மூளை மற்றும் மூளைத் தண்டு வடத்தில் (Brain Stem) பாதிப்பு ஏற்பட்டால், நாம் பார்க்கும் பிம்பம் இரண்டாகத் தெரியலாம். மேலும், வாய் கோணுதல், நடையில் தள்ளாட்டம், கைகள் மற்றும் கால்களில் மரத்துப்போன உணர்வு, பக்கவாதம் வந்ததுபோல உடல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படும்.

* கண்களுக்குச் செல்லும் நரம்புகளில் தாக்குதல் ஏற்பட்டால், பார்வைக்கோளாறு, பார்வை மங்கலாகத் தெரிவது, பார்வைத்திறனில் நிற மாறுபாடுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

* மூளை, மூளையிலிருந்து வரும் தண்டுவடம், கண் நரம்புகள் ஆகிய பகுதிகளைச் சுற்றி அல்லது உடலின் மற்ற பல பகுதிகளில் எவ்வித அறிகுறிகளும் தெரியாத வகையில் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

* லேசான அறிகுறிகளுடன் இந்த நோய் வரலாம். உதாரணமாக, வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஏதாவதொரு பகுதியில் உணர்வுகள் இல்லாமல் இருப்பது; கைகள் மற்றும் கால்களில் அடிக்கடி மரத்துப்போன உணர்வு ஏற்படுவது; மரத்துப்போன உணர்வு பல நாள்கள் நீடிப்பது; உடலில் அடிக்கடி சோர்வு அல்லது சுணக்கம் ஏற்படுவது.

மேற்கண்ட அறிகுறிகளோ அல்லது உடலில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்களோ ஏற்பட்டால், தாமதிக்காமல் நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்.

நரம்பியல் நிபுணர் டாக்டர் வெங்கட்ராமன்

பாதிப்பின் நிலைகள் (Stages) :

எம்.எஸ் பாதிப்பு, Inflammatory stage மற்றும் Degenerative stage என இரண்டு வகைப்படும்.

'எம்.எஸ்' பாதிப்புக்கான அறிகுறிகளாகக் கூறிய எல்லா பாதிப்புகளுமே, Inflammatory stage எனப்படும் முதல் நிலையில்தான் தென்படும். அந்த நேரத்திலேயே சிகிச்சை பெறத் தொடங்கினால், இரண்டாம் நிலையான Degenerative stage வரை செல்லாமல் தடுக்க முடியும். ஒருவேளை பாதிப்பின் தன்மை இரண்டாம் நிலைக்குச் சென்றுவிட்டால், இயல்பான நடை, ஓட்டம், வழக்கமான செயல்பாடுகளில் உத்வேகம் அல்லது சுறுசுறுப்பு குறைந்து சம்பந்தப்பட்ட நோயாளி வீல்சேரில் முடங்கவும் வாய்ப்புள்ளது.

நிரந்தமாகக் குணப்படுத்த முடியுமா?

இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு வெளிப்படையான மாற்றங்கள் தெரியும்போது, உடனடியாக இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 3 - 5 தினங்களுக்குக் கொடுக்கப்படும். அதன்பிறகு, இந்த நோய் மீண்டும் மூளை நரம்புகளைத் தாக்காமல் இருப்பதற்கு, Disease modification therapy எனும் சிகிச்சை தரப்படும். இதற்கான சிகிச்சை வழிமுறைகள் பல வகைப்படும். நோயாளியின் தன்மையைப் பொறுத்து, மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

பெண்கள் நலம்

உணவு மற்றும் வாழ்வியல் முறைகள் :

* முறையான சாப்பாடு, சரியான தூக்கம், உடல்நலனை பாதிக்கும் பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

* 'எம்.எஸ்' பாதிப்பு உடையவர்கள், சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலத்திலும், கூடுமானவரை வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

* வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

* அசுத்தமான கழிவறைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுகிறார் மருத்துவர் வெங்கட்ராமன்.

வரும்முன் காப்போம்... 'எம்.எஸ்' பாதிப்பை வெல்வோம்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...