Skip to main content

தொடர்ந்து மாஸ்க் அணிவதால் நோய் எதிர்ப்பு‌ சக்தி குறையுமா? மருத்துவ விளக்கம்!

கடந்த 2020-ம் ஆண்டில், ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தியது கொரோனா வைரஸ். கொரோனா தொற்றுப்பரவலுக்குப் பின், பொதுமக்களுக்கு பல சுகாதார நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டன. அதன்படி, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கட்டாயம் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், சுகாதாரத்துறை நடவடிக்கைகள், தடுப்பூசி கண்டுபிடிப்பு போன்ற காரணங்களால் கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக தற்போது சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற எதுவும் கட்டாயம் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவர் எஸ். வெங்கடேஸ்வரன்

எனினும், சிலர் முகக்கவசம் அணிவதைப் பார்க்கிறோம். வெளியில் செல்லும் நேரங்களைத் தவிர்த்து மணிக்கணக்காவும் சிலர் முகக்கவசம் போட்டுக்கொள்கின்றனர். இவ்வாறு எந்த நேரமும் முகக்கவசம் அணிவதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் உண்மைத்தன்மையை அறிய, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரன் மற்றும் தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதனிடம் ஆகியோரிடம் பேசினோம்.

மருத்துவர் வெங்கடேஷ்வரன் கூறுகையில், ``முகக்கவசம் அணிவது நல்லதுதான். முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி ஒருபோதும் குறையாது‌. தூசியிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். காற்று மூலம் பரவும் நோய்களைக் கூட இதன் மூலம் தடுக்க முடியும். முகக்கவசம் அணிவதால் மூச்சுத்திணறல் ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று சொல்வதெல்லாம் நாமே நினைத்துக் கொள்வதுதான். முகக்கவசம் அணிவதால் சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அலர்ஜி, புகையினால் வரக்கூடிய புற்றுநோயைக்கூட ஓரளவு தடுக்க முடியும்" என்றார்.

தொற்றுநோய் மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன்

மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறும்போது, ``முகக்கவசம் அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையாது. இப்படி நினைப்பதே தவறான கண்ணோட்டம். மருத்துவர்கள் காலம் காலமாக 16 -18 மணிநேரம் முகக்கவசம் அணிந்துதான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்போதோ குறைந்திருக்க வேண்டும். எனவே, முகக்கவசம் அணிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல" என்றார்.

ஜப்பான் போன்ற நாடுகளில், கொரோனாவுக்கு முன்பிருந்தே முகக்கவசம் அணிவது அவர்களது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதா?

``ஜப்பான், கொரியா மக்களுக்கு முகக்கவசம் அணிவது அவர்களது கலாசாரத்தில் ஒன்றாகிவிட்டது. அவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தாலும் முகக்கவசம் அணிவதைப் பார்க்க முடியும். தங்களது உடல் குறித்த பாதுகாப்பில் ரொம்பவே அக்கறையுடன் இருப்பவர்கள். அவர்களுக்கு இதுவரை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததாகவும் எந்த சான்றும்‌ இல்லை".

WHO உலக சுகாதார அமைப்பு

கொரோனாவின் அடுத்த அலை வரக்கூடும்... தயாராக இருக்குமாறு, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதே?

``கொரோனாவின் அடுத்த அலை எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே உண்டான கொரோனா பாதிப்பின்‌போது ஏராளமானோர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பு இருந்து, தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களுக்கு நிச்சயம் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

மேலும் எல்லோரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கொரோனா மட்டுமன்றி பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளுயென்ஸா போன்ற வைரஸ் பாதிப்புகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள இது உதவும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...