Skip to main content

Team India: `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம்; உலகக் கோப்பையே லட்சியம்' - இந்திய அணி செய்யவேண்டியதென்ன?

எந்தவொரு தொடரின் பின்னூட்டமும், அடுத்த தொடருக்கான உள்ளீடாகத் தரப்பட வேண்டியவை. அந்தப் படிப்பினைதான், தோல்வியையே சந்திக்காத அளவிற்கு ஒரு அணியை அடுத்தடுத்த தளங்களுக்கு ஆயத்தப்படுத்தும்.

அவ்வகையில், `பைலேட்டரல் கோப்பைகள் நிச்சயம், ஆனால், உலகக் கோப்பையே லட்சியம்' என்ற விசாலப் பார்வையோடு நகரும் இந்தியாவிற்கு, கடந்த மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப் பயணங்கள், கற்றுத் தந்துள்ள பாடங்கள் என்னென்ன?

Team India

இத்தொடர்களின் முடிவுகளை பகுப்பாய்வு செய்தால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை, இந்தியா எளிதாகவே வென்றது. ஆனால், அந்த இரு நாடுகளுடனான ஒருநாள் தொடர்களில், ஒருசில போட்டிகளில், அந்த அணிகள் கடுமையான சவாலாக விளங்கின. அப்போட்டிகளில்தான், இந்தியாவின் குறைகள் ஆங்காங்கே தென்பட்டன. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் சரி, ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் சரி, சொற்ப ரன்கள் வித்தியாசத்திலோ, குறைவான பந்துகள் எஞ்சியிருக்கும் போதோதான், இந்தியாவிற்கு, வெற்றி வசப்பட்டது. இதற்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமான குறைபாடுகளே காரணம். ஒவ்வொன்றாக நாம் விவாத மேடைக்குக் கொண்டு வருவோம்.

ஒருநாள் போட்டிகளில் கில், தவான், ராகுல் என பல்வேறு காம்பினேஷன்களை இந்தியா முயற்சித்தது. டி20-ல் ரோஹித் - சூர்யா ஆடினர். இதில், கில் - தவான் கூட்டணி மிக வெற்றிகரமாக அமைந்தது. ரோஹித் - சூர்யா கூட்டணியில், ஒவ்வொரு போட்டியிலும், யாரோ ஒருவர்தான், சிறப்பாக ஆடினர். ராகுலுக்கு ரிதம் இன்னமும் ஒத்திசைவு பெறவில்லை. ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஒட்டுமொத்தமாகத் தள்ளாடியது என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்னமும் அதிரடியாக ரன்களைச் சேர்த்திருக்கலாம் என்பதையே பவர்பிளே ரன்ரேட் கூறியது. உலகக் கோப்பையை மனதில் நிறுத்தி இதை அணுகினால், ரோஹித் சரியாக ஆடாத போட்டிகளில், சூர்யா சமாளித்தார். இதுவே, சூர்யாவின் இடத்திற்கு கேஎல் ராகுல் வந்து, அவரது ஸ்லோ ஸ்கோரிங் பாணி முன்வந்தால், பவர்பிளேயில், ரன்ரேட் இன்னமும் அடி வாங்கலாம். ஒருநாள் போட்டிகளிலாவது, இதை பின்வரும் வீரர்கள், கடைசி ஜிம்பாப்வே போட்டியில், கில் சரிக்கட்டியதைப் போல ஈடு கட்டுவார்கள். அதிவேகமாக நடந்து முடியும் டி20 போட்டிகளில், இது முக்கிய குறைபாடாக, விஸ்வரூபமெடுக்கும்.

Team India
அதேபோல், போட்டிகளின் டெத் ஓவர்களிலும் ரன்கள் குறைவாகவே வந்தன. அக்ஸர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஒருசில போட்டிகளில், தங்களது கேமியோக்களினால், ரன்வேட்டை ஆடினார்கள்.

என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஃபினிஷர்கள் மற்றும் டெய்ல் எண்டர்களின் பங்காக வந்து சேர வேண்டிய ரன்களுக்கு பங்கமே விளைந்திருந்தது. இக்காரணத்தினாலேயே, எல்லாப் போட்டிகளிலும், இந்தியா அடிக்க வேண்டியதில், 30 ரன்கள் வரை, குறைவாகவே வந்திருந்தது. வெவ்வேறு பந்துவீச்சை எப்படி இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர் கொண்டார்கள் என்று பார்த்தால், ஜிம்பாப்வேயின் ஸ்பின்னர்களை ஓரளவு சமாளித்தனர். சிக்கந்தர் ரசா, தொடரில், இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், பெரிதாக அவராலோ, சீன் வில்லியம்ஸாலோ, பேட்ஸ்மேன்கள் திணறடிக்கப்படவில்லை. ஆனால், நேர்மாறாக, இரு அணிகளின் வேகப்பந்து வீச்சுமே, சற்றே இந்திய பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்த்தது. கடைசிப் போட்டியில், ஜிம்பாப்வேவின் பிராட் இவான்ஸின் ஐந்து விக்கெட் ஹாலே அதற்கான உதாரணம்.

இதில் சில வீரர்கள்தான் ஆசிய மற்றும் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார்கள். என்றாலும், இத்தவறு அங்கும் கடத்தப்படாமல், கவனம் கொள்வது அவசியம். ஆசியக் கோப்பை நடக்கவுள்ள, சுழலுக்கு ஆதரவளிக்கும் அரபு பிட்சுகளில் ஓரளவு சமாளிப்பார்கள் என்றாலும் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ள ஆஸ்திரேலிய மண்ணில், சர்வதேச தரம் நிறைந்த, தென்னாப்பிரிக்கா போன்ற பௌலிங் யூனிட்களை, இந்தியா எவ்விதம் எதிர் கொள்ள முடியும் என்ற அபாயச் சங்கொலி, கேட்கவே செய்கிறது. புதுப்பந்து, பவர்பிளே முடிவதற்கு உள்ளாகயே ஒரு சில விக்கெட்டுகளை காவு வாங்கி விடுமென்பதால், கவனம் தேவை.

Team India

ஒட்டுமொத்தமாக பார்த்தால், சில போட்டிகளில் இந்திய பேட்டிங் லைன் அப்பில், நிலைத்தன்மை குறைவாகவே இருந்தது. டிஃபென்சிவ் மோடுக்கும், அட்டாக்கிங் கிரிக்கெட்டுக்கும் நடுவே ஊசலாடினர். சூர்யக்குமார், கில், தவான் ஆகியோர் சேர்த்த ரன்களைக் கழித்துப் பார்த்தால், மற்ற வீரர்கள் சேர்த்த ஒட்டுமொத்த ரன்கள், போட்டியின் முடிவுகள், அபாயகரமானதாகக் கூட முடிந்திருக்கலாம் என்றே காட்டுகிறது. அடுத்ததாக, இந்தியாவின் பௌலிங்கின் பக்கம் திரும்பினால், முதலில் கண்ணில் படுவது சுழல் படை. சஹால், தான் தவிர்க்க முடியாதவர் என மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் எடுத்த ஏழு விக்கெட்டுகளின் மூலம், மறுபடியும் பதிய வைத்தார். ரவி பிஸ்னாயும், மாற்று வீரராகத் தயாராக இருப்பதை, இறுதி டி20-ல், 4 விக்கெட்டுகளோடு, நிரூபித்திருந்தார். அதேவேளை, அக்ஸரின் ஃபினிஷிங் திறமை மட்டுமல்ல, ரன்களைக் கட்டுப்படுத்திய ஹுடாவின் சுழலும் பந்துகளும், இந்தியாவின் முன் உள்ள நிறைய தேர்வுகளை அடிக்கோடிட்டன.

சுழலைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்புமளவிற்கு, இந்தியாவிடம் ஆப்சன்கள் உள்ளன. ஆனால், வேகப் பந்து வீச்சில், அணி முழு பலத்தோடு இல்லை. புதுப்பந்தில் விக்கெட் எடுக்க சற்றே திணறினர். அர்ஷ்தீப் நம்பிக்கை தந்திருக்கிறார் என்றாலும், பெரிய மேடையில், இன்னமும் பலம் வாய்ந்த அணிகளோடு போதும் போது, அவரால், அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதற்கு ஆசியக் கோப்பை தொடரில் ஓரளவு விடை கிடைக்கலாம். ஆவேஷ் கானின் எக்கானமி, பல போட்டிகளில், 10-ஐ தாண்டி, ஆசியக் கோப்பை தொடரில் இவரது பந்துகள் குறிவைக்கப்படலாமோ என பயமுறுத்தியது. தாக்கூர் கேம் சேஞ்சர்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்தான் என்றாலும், ரன்களை அவர் கசிய விடுவது, ஹீரோ மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு நடுவே அவரை மாறி மாறிச் செல்ல வைக்கிறது. பும்ராவும், புவனேஸ்வர் பார்த்துக் கொள்வார்கள். அர்ஷ்தீப் கூட அடித்துத் துவைப்பார் என்றாலும் கூட, வேகப் பந்து வீச்சுப் படையில், இன்னமும் ஒரு இடம் மிச்சமுள்ளதென்பதே உண்மை. ஆசியக் கோப்பையில், அரபு மண்ணில், சுழல் பலத்தை வைத்துச் சமாளித்தாலும், உலகக் கோப்பைக்குள், இன்னுமொரு பௌலரை, இந்தியா தயார்ப்படுத்த வேண்டும்.

Team India

இப்போட்டிகளில், இந்தியத் தலைமை கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. சில போட்டிகளில், ஜடேஜா, ஹுடா ஆகியோர் மற்ற முழுநேர பௌலர்களை விடவும் சிறப்பாகப் பந்து வீசியிருந்தனர். ஆனாலும், அவர்களுக்கு இன்னமும் அதிக ஓவர்களைத் தராமல், மோசமாக வீசினாலும் பரவாயில்லை, `முழுநேர பந்து வீச்சாளர்களுக்கே முன்னுரிமை' என்பது போல், அவர்களுக்கே முழு கோட்டாவும் வழங்கப்பட்டது. ஏதோ ஒரு முழுநேர பௌலருக்கு, ஏதோ ஒரு நாள், அவர்களுடைய நாளாக அமையாமல் போகலாம், அச்சமயங்களில், பகுதி நேர பௌலர்கள் சிறப்பாகப் பந்து வீசும் பட்சத்தில், அவர்களுக்கு அதிக ஓவர்கள் அளிக்கப்படும் அணுகுமுறையை இந்தியா கையிலெடுக்க வேண்டும்.

இந்தியா

சில போட்டிகளில், டாஸை வென்றாலும், பேட்டிங்கைத் தேர்ந்தெடுப்பதில், இந்தியாவிடம் ஒரு தயக்கம் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், தங்களால் ரன்களை டிஃபெண்ட் செய்ய முடியுமா என்ற ஒரு சின்ன பயம்தான். அது மாற வேண்டுமெனில், ஜிம்பாப்வே ஒருநாள் போட்டிகள் அனைத்திலும், அவர்களை ஆல் அவுட் செய்ததைப் போல, எப்படிப்பட்ட ஸ்கோரையும் இந்த பௌலிங் யூனிட்டால் டிஃபெண்ட் செய்ய முடியுமென்ற நம்பிக்கைக்குரிய ஒன்றாக இந்திய பௌலிங் உருமாற வேண்டும்.

பெஞ்ச் ஸ்ட்ரெந்தை வலுப்படுத்தவோ, அடுத்த தலைமுறை வீரர்களைக் கண்டறியவோ, ஒவ்வொரு வீரருக்கான சரியான மாற்று வீரரை கைவசம் வைத்துக் கொள்ளவோ என ஏதோ ஒரு காரணத்துக்காக, கடந்த சில தொடர்களாக இந்திய அணி, நினைத்தபடியெல்லாம் வீரர்களுக்கான ஆடிஷனை நிகழ்த்திப் பார்த்து விட்டது. இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, ஒரு சில போட்டிகளையாவது, பெரிய மேடையான, உலகக் கோப்பையில் ஆடப் போகும் அதே அணியோடு சந்திக்க வேண்டிய வேளை வந்திருக்கிறது. ஆசியக் கோப்பை தவிர்த்துப் பார்த்தாலும், உலகக் கோப்பைக்கு முன்னால், இந்தியா இன்னமும், 6 டி20 போட்டிகளில் ஆட இருக்கிறது. அப்போட்டிகளில் அதே பிளேயிங் லெவனோடு பயணிப்பதுதான், இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...