Doctor Vikatan: பொதுவாக, இதயப் பிரச்சனைகளுக்காக ஸ்டென்ட் வைப்பதைப் பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சிறுநீரகப் (கிட்னி) பிரச்சனைகளுக்காகவும் ஸ்டென்ட் வைக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் அவருடைய உறவினருக்குக் கிட்னி ஸ்டென்ட் வைத்ததாகக் கூறினார். கிட்னி ஸ்டென்ட் என்றால் என்ன? இது யாருக்குத் தேவைப்படும், மற்றும் இது ஏன் வைக்கப்படுகிறது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஆன்டன் உரேஷ்குமார்

ஸ்டென்ட் என்பது சிறுநீரகம், இதயம் என ரத்த நாளங்களில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் வைக்கப்படும். கழுத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும், வயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தாலும்கூட ஸ்டென்ட் வைப்பார்கள். கிட்னியையும், சிறுநீர்க் குழாயையும், சிறுநீர்ப்பையோடு கனெக்ட் செய்வதுதான் கிட்னியில் பொருத்தப்படுகிற ஸ்டென்ட்டின் நோக்கம். இதை வைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
பொதுவாக, வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients), நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் சிறுநீரகத் தொற்று (Infection) ஏற்படும், இதனை மருத்துவ மொழியில் 'பைலோனெப்ரிடிஸ்' (Pyelonephritis) என்று சொல்வோம். இப்படி இன்பெக்ஷன் (தொற்று) வரும்போது, சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய சளி போன்ற திரவம் உலர்ந்து போய் அடைத்துக் கொள்ளும். அப்படி அது அடைக்காமல் இருப்பதற்காகத்தான் ஸ்டென்ட் போடுகிறோம். இந்த ஸ்டென்ட், சிறுநீரை (Urine) ஒரு பக்கமாக வழிமாற்றிக் கொண்டே இருக்கும். இதனால் அடைப்பு ஏற்படாது.
நம் உடலில் எங்கு இன்பெக்ஷன் வருமோ அங்கு சளி போன்ற திரவப்படலம் உண்டாகும்.உதாரணத்துக்கு, நுரையீரலில் இன்பெக்ஷன் ஆகும்போது சளி உண்டாகிறது. அந்தச் சளியை நாம் இருமி, காரித் துப்பிவிடுகிறோம். சில நேரம் அந்தச் சளியே அடைத்துக் கொண்டு, பயங்கரமான, கடுமையான இருமலாக வெளிப்படும். அப்படியும் சளி வெளியே வராமல் இருந்தால், அதற்கு நாம் ஊசி மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்துச் சரி செய்வோம்.

ஆனால், சிறுநீரகத்தைப் பொறுத்தவரை அது உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. அதில் இன்பெக்ஷன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால் 'பேபிலரி நெக்ரோசிஸ்' (Papillary necrosis) என்ற நிலை ஏற்படும். இன்பெக்ஷன் ஆவதால், எப்படி நுரையீரலில் சளி வருகிறதோ, அதேபோல சிறுநீரகத்திலும் இன்பெக்ஷன் ஆகி சளி (கழிவு) வரும்போது, அது கட்டியாகி அடைத்துக் கொண்டால், சேகரமாகும் சிறுநீர் உடனுக்குடன் அடைப்பின் காரணமாக உடலிலேயே தங்கிவிடும். இதனால் தொற்றானது மேல்நோக்கி ஏறிவிடும். அப்படி ஏறுவதால் ரத்தத்தில் நச்சு பரவும் செப்சிஸ் நிலை ஏற்பட்டுவிடும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், கிட்னி இன்பெக்ஷனைக் கண்டறியும்போது நாம் ஸ்டென்ட் போடுகிறோம்.
பொதுவாக வயதானவர்களுக்குப் போடக்கூடிய ஸ்டென்ட்டிற்கு இதுதான் முதன்மைக் காரணம். சில சமயம் இளவயதினருக்கும் போடப்படுகிறது. சமீபத்தில் திருமணமானவர்களுக்கு, தாம்பத்ய உறவால் ஏற்படக்கூடிய தொற்றான 'ஹனிமூன் சிஸ்டைடிஸ்' (Honeymoon cystitis) வரும். அதற்கும் ஸ்டென்ட் போடுவதுண்டு. மற்றபடி, சிறுநீரக கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஸ்டென்ட் போடுவதுண்டு. புற்றுநோய் ஆபரேஷனுக்குப் பிறகும் ஸ்டென்ட் போடுவோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு கூட ஸ்டென்ட் போடலாம். பெரும்பாலான ஸ்டென்ட்டுகளை நான்கு மாதங்களில் எடுத்துவிட வேண்டும். குறிப்பிட்ட சில மருத்துவக் காரணங்களுக்காக சில ஸ்டென்ட்டுகளை ஒரு வருடம் வரை கூட வைத்திருக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment