Doctor Vikatan: என் வயது 30. எனக்கு இரண்டு தொடைகளும் உரசி உரசி அடிக்கடி புண்ணாகின்றன. இதற்கு என்ன காரணம், தடுக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா.

நீங்கள் உடல்பருமன் கொண்டவரா என்பது தெரியவில்லை. பொதுவாகவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு, குறிப்பாக... இந்தியப் பெண்களுக்கு இயல்பான உடல் அமைப்பின் காரணமாகவும் இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதியும், தொடைப் பகுதியும் சற்றே சதைப்பற்றுடன் இருப்பது மிகவும் சகஜமானது.
இதன் காரணமாக நடக்கும்போதோ அல்லது பிற வேலைகளின்போதோ தொடைகள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உராயும்போது, அந்த இடம் புண்ணாகிறது.
கோடைக்காலத்தில் வியர்வை கசிவதால் பூஞ்சைத் தொற்று (Fungal infection) ஏற்படலாம். வியர்வையோடு உராய்வும் அதிகமாகும் போது அந்த இடத்தில் புண்கள் அல்லது கடுமையான எரிச்சல் வரலாம்.
தரமான பருத்தியால் ஆன தளர்வான உடைகள் (Cotton Trousers) அல்லது காட்டன் சைக்கிளிங் ஷார்ட்ஸ் (Cotton Cycling Shorts) போன்றவற்றை ஆடைகளுக்கு உள்ளே அணிந்து கொள்ளலாம். இது தொடைகள் நேரடியாக உராயாமல் தடுக்கும்.
தொடைகள் உராயும் பகுதியில் தடவிக் கொள்ளக்கூடிய உராய்வுத் தடுப்பு க்ரீம்களை (Anti-chafing creams) பயன்படுத்தலாம்.

ஏற்கெனவே உராய்வு ஏற்பட்டு புண்ணாகியிருக்கும் இடத்தில், மீண்டும் புதிய சருமம் ஆரோக்கியமாக உருவாவதற்கு 'ஸிங்க் ஆக்ஸைடு' கலந்த க்ரீம்களை (Zinc Oxide Cream) பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயப்பர் ராஷ் க்ரீம்களில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு, சருமத்தின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, புண்ணை ஆற்ற பெரிதும் உதவும். இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுகள்தான்.
தொடைகளில் ஏற்படும் இந்த உராய்வுப் பிரச்னைக்கு, உடல் எடையைக் குறைப்பது ஒன்றுதான் முக்கியமான மற்றும் நிரந்தரத் தீர்வாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment