நான்கு வயது குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படும் சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூர் அருகிலுள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில் வசிப்பவர் பாஜக வட்டாரத் தலைவர் அபிநந்தன். இவரின் 4 வயது மகன் வைஷ்ணவ்.
வீட்டில் துறுதுறுவென்று இருக்கும் வைஷ்ணவ், கடந்த 16-ஆம் தேதி இரவு நெஞ்சு வலிக்கிறது என்று அழுதிருக்கிறான். செரிமான பிரச்சனையாக இருக்கும் என்று பெற்றோர்கள் வீட்டிலுள்ள மருந்துகளை வைத்து வைத்தியம் செய்துள்ளனர்.
அப்படியும் வலி தீராமல் வைஷ்ணவ் அழுது துடித்திருக்கிறான். அதனால் பதற்றமான பெற்றோர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளானர். வாகனத்தில் செல்லும்போதே உணர்விழந்துள்ளான்.
பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டான், மாரடைப்பால் இந்த மரணம் நேர்ந்திருக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர்.
வைஷ்ணவ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அவன் வீட்டுக்கு வந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேநேரம், 4 வயதே ஆன குழந்தைக்கு மாரடைப்பு வருமா? என்று எல்லோரும் அதிர்ச்சியுடன் பேசி வருகிறார்கள்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் 'உடற்கூறாய்வு அறிக்கை வராத நிலையில் சிறுவன் இறந்தது மாரடைப்பால்தான் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சிறுவனுக்கு வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருந்திருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்' என்று தெரிவித்திருக்கிறார்கள்.
வைஷ்ணவ் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
Comments
Post a Comment