Skip to main content

Doctor Vikatan: வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்தால் உடலுக்கு நல்லதா... சளி பிடிக்குமா?

Doctor Vikatan: வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை? வெந்தயம் ஊறவைத்த நீர் குளிர்ச்சியானது, அது சளி பிடிக்க காரணமாகும், தவிர, மலச்சிக்கலையும் ஏற்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா? வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் ஜலதோஷம் பிடிக்குமா?

பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி

அரசு சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி

நம் சமையலறையில், நம் அஞ்சறைப் பெட்டியை அலங்கரிக்கும் ஆரோக்கியம் தரும் சமையல் பொருள்களில் மிக முக்கியமான ஒன்று வெந்தயம். இதில்  புரோட்டீன், நியாசின், வைட்டமின் சி, நார்ச்சத்துகள்,  பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற பல சத்துகள் நிறைந்து இருப்பதால், மருத்துவப் பயன்களையும் வெகுவாகக் கொண்டுள்ளது. 

வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச்சுவை நம்மில் சிலரை, பொதுவாகக் குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும். வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக்கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது. பசியைத் தூண்டக்கூடியது. நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய்,  உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது. 

வெந்தயக் களி

வெந்தய தோசை, வெந்தயக்களி, வெந்தயக் குழம்பு, வெந்தய ரசம் போன்றவை பாரம்பர்யமாக நம் சமையலில் இடம்பெறும் உணவுகள்.  தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த பிரசவித்த பெண்களுக்கு வெந்தயக் கஞ்சி, வெந்தயக்களி  கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள், ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தினசரி வெந்தயத்தை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.  தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் பச்சையாகவோ, அல்லது பொடித்தோ  எடுத்துக் கொள்ளலாம். இரவில் ஊறவைத்து காலையில் அந்த நீருடன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம்.  அந்த நீரை அருந்துவதால் சளி பிடிக்காது.

அடிக்கடி சளித்தொல்லைக்கு உட்படுபவர்கள் ஊறவைத்த வெந்தயத்துடன் சிறிது வெந்நீர் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை வெந்தயத்தை  எடுத்துக் கொள்ளலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும். வெந்தயத்தைப் பச்சையாகவோ,  பொடித்தோ அல்லது வெந்தயப் பொடியுடன் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த மலச்சிக்கல் தீரும்.

வெந்தயம்

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம் குறைந்து முடி உதிர்வு கட்டுப்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். தலைமுடியின் கருமை நிறம் அதிகரிக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி தரும். தலைச்சூடு நீங்கும்.

வெந்தய விழுதைத் தலையில் தேய்த்து  20 முதல் 30 நிமிடங்களில் குளித்து விடுதல் நல்லது . குளித்த பிறகு தலையை ஈரம் போக நன்கு துவட்டுதல் மிகவும் அவசியம். அத்துடன் தலைக்கு சாம்பிராணி தூபம் போடுவதாலும் நீரேற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...