Skip to main content

Doctor Vikatan: சருமத்தில் உள்ள Sun tan-ஐ நீக்க வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலுமே என் சருமம் வெயில் பட்டு, கருத்துப் போகிறது. அப்படிக் கருத்துப்போன அடையாளம் முகத்தில் திட்டுத்திட்டாக (Sun tan) கறுப்பாகப் படிந்திருக்கிறது. அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா.... வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

Sun tan வராமலிருக்க வேண்டும் என்றால், சன் ஸ்கிரீனை தேர்வுசெய்வதிலிருந்தே அதற்கான அக்கறை தொடங்க வேண்டும். சிலர் காலையில் தடவிக்கொண்டு செல்லும் சன்ஸ்கிரீனுடனேயே மாலை வரை இருப்பார்கள். ஆனால், அது போதாது. உதாரணத்துக்கு, சன் ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் (SPF) 15 எனக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தடவியதிலிருந்து 45 நிமிடங்கள்வரைதான் பாதுகாப்பு கொடுக்கும்.  அதன் பிறகு வெயிலின் தாக்கமானது சருமத்துக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். எனவே, நாம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருக்கிறோம், எந்த ஊரில் இருக்கிறோம், எந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப எஸ்பிஎஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும். வெயில் அதிகமுள்ள சூழலில் அதிக எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலும் சருமம் கருத்துப் போக இதுதான் முக்கிய காரணம்.

வெயில் பட்டுக் கருத்துப்போன சருமம், அது நீண்டநாள் தாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் பட்சத்தில், பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனும் பிரச்னையாக மாறும். அதாவது, வெயிலில் செல்லும்போது சருமத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்வது, நீண்ட நாள்கள் அப்படியே இருப்பதெல்லாம்  வாயைச் சுற்றி, நெற்றியைச் சுற்றி கரும்படலத்தை ஏற்படுத்தும். அந்த நிலைக்குச் செல்லாமல் தடுப்பதுதான் முக்கியம். ஒருவேளை அப்படி கரும்படலம் வந்துவிட்டால், வீட்டு சிகிச்சைகள் எல்லாம் உதவாது. பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படும்.

வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் அன்றைய தினமே செய்கிற சில சிகிச்சைகளால், சருமத்தில் ஏற்பட்ட கருமை உடனடியாக மறைந்துவிடும். அடுத்த நாள் காலையே சருமம் பளிச்சென இருக்கும். சன் ஸ்கிரீன் உபயோகிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், குடை உபயோகிப்பது, தொப்பி உபயோகிப்பது, ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வது போன்றவை கூடுதல் பலன்களைத் தரும். 

Sunscreen

மருந்துக் கடைகளில் கேலமைன் ஐபி லோஷன் (Calamine Lotion Ip) என கிடைக்கும். லாக்டோ கேலமைனையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  வெயிலில் அலைந்துவிட்டு வந்த தினம் மாலை, கேலமைன் ஐ.பி லோஷனில் கால் டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா சேர்த்ததும் அந்தக் கலவை நுரைத்து வரும். அந்த நுரை அடங்குவதற்குள் அதை எடுத்து சருமத்தில் கருத்துப்போன இடங்களின்மேல் தடவ வேண்டும். முகம், கழுத்து, கை, கால்கள், முதுகு என எல்லா பகுதிகளிலும் இதைத் தடவலாம். நன்றாகக் காய்ந்த பிறகு துடைத்து எடுக்க வேண்டும். புளித்த தயிரை நன்கு அடித்துக்கொண்டு, அதில் ஓட்ஸை பொடித்துப் போட்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்  சேர்த்துக் கலந்து முகத்தில் தடவவும்.

தினமும் கேலமைன் ஐபி லோஷனும், வார இறுதியில் தயிர்- ஓட்ஸ் பேக்கும் போட்டு வந்தால் வெயில் பட்டுக் கருத்துப்போன (Sun tan) சருமம் பழைய நிறத்துக்குத் திரும்பும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்துக்கு சருமத்தின் நிறத்தை ஒரு ஷேடு லைட்டாக மாற்றும் தன்மை உண்டு. இவை தவிர, 'இன்ஹிபிஷன் தெரபி' (Inhibition Therapy) என  ஒரு சிகிச்சை உண்டு. இதை சருமநல மருத்துவர்கள் மற்றும் சரும சிகிச்சை நிபுணர்களிடம் செய்து கொள்வதும் பலனளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...