Skip to main content

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்
கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்.

அத்தகைய சூழ்நிலைகளில், நோயாளிக்கு உடனடியாக சர்க்கரையோ அல்லது ஏதேனும் இனிப்புப் பண்டத்தையோ சாப்பிடக் கொடுத்தாலே, இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இவ்வாறு அதிகப்படியாக வியர்க்கும்.

சர்க்கரை குறைபாட்டினால் வியர்க்கும்போது, நெஞ்சுவலி, நெஞ்சில் பாரமான அழுத்தம் போன்ற உணர்வு, நெஞ்சை இறுக்குவது போன்ற வலி ஆகியவை  இல்லாமல் வெறும் வியர்வை மட்டும் இருந்தால் பயப்பட வேண்டாம்.

எனவே, அதிக வியர்வையோடு சேர்ந்து மூக்கிற்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நெஞ்சு அழுத்தமோ அல்லது நெஞ்சு வலியோ இருந்தால் மட்டும்தான் நாம் பயப்பட வேண்டும். பொதுவாக, 'எனக்குச் சாதாரணமாகவே கொஞ்சம் அதிகமாக வியர்க்கிறது' என்றால், அதை நாம் இதயநோயின் அறிகுறியாக நினைத்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments