Doctor Vikatan: என் தோழி கர்ப்பமாக இருக்கிறாள். கர்ப்பம் உறுதியான நாள் முதல் வீட்டைவிட்டே வெளியே வர மறுக்கிறாள். வெயிலின் தாக்கம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என உறுதியாக நம்புகிறாள். அவளது பயம் அனாவசியமானதுதானே.... வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக வழிகாட்டல் ஏதும் உண்டா?
பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

கோடைக்காலத்தில் எல்லோருக்குமான பொதுவான அறிவுரையாகச் சொல்லப்படுவதுதான் கர்ப்பிணிகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. அது டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது.
மிக அதிக வெப்பமான சூழலுக்கு வெளிப்படும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் விளைவாக தலைச்சுற்றல், வாந்தி, களைப்பாக உணர்வது போன்ற அறிகுறிகள் வரலாம். இதைத் தவிர்க்க அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 3 லிட்டராவது குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள், இளநீர், மோர் போன்று குடித்து உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
வெப்ப அலை வீசும்போதும், உச்சி வெயிலின் போதும், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தவிர்க்க முடியாமல் வெளியே போக வேண்டும் என்றால், அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இடைவெளியே இல்லாமல் பயணம் செய்யக்கூடாது. இடையிடையே தண்ணீர் குடித்துக்கொள்ள வேண்டும். இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான, காட்டன் ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள குடை, தொப்பி போன்றவை அவசியம். எங்கே சென்றாலும் தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரணமான வெயிலால் கர்ப்பிணிகளுக்குப் பெரிய பிரச்னைகள் வராது. வெப்பநிலை அதீதமாக இருக்கும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) அதீத வெப்பநிலைக்கு ஆளாகும்போதும், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும்போதும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியூரல் டியூப் குறைபாடுகள் (Neural Tube Defects) எனப்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் வரும் ரிஸ்க் அதிகரிக்கும். எனவே, அதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு பிரச்னையைச் சரியாக கவனிக்கத் தவறும்பட்சத்தில், கர்ப்பிணிகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பே பிரசவ வலி வர வாய்ப்பு உண்டு. போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் நஞ்சுக்கொடிக்குப் போகும் ரத்த ஓட்டமும் குறையலாம். அதனால் குழந்தைக்கும் பிரச்னை வரலாம். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், சோர்வு, குழந்தையின் அசைவை சரியாக உணர முடியாதது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், கர்ப்பிணிகள் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment