Doctor Vikatan: வெயில் காலத்தில் கண்களுக்கு கட்டாயம் கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா... சூரிய ஒளி கண்களில் நேரடியாகப் பட்டால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா? சாதாரண கண்ணாடி போதுமா, கூலிங் கிளாஸ்தான் அணிய வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய்ஷங்கர்.

அதிகப்படியான வெயில் கண்களைப் பல வழிகளில் பாதிக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV rays) கண்களை பாதித்து பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமான பாதிப்பு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை (Cataracts). புறஊதா கதிர்கள் கண்களில் கண்புரை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.
அடுத்து, புறஊதாக் கதிர்கள், விழித்திரையின் (Retina) மையப்பகுதியான மேகுலாவை சேதப்படுத்தலாம். அதனால் வரும் பாதிப்பை மேகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration) என்கிறோம். விழித்திரையில் உள்ள நரம்புத் திசுக்களை பாதிப்பதால் சோலார் ரெட்டினோபதி (Solar Retinopathy) என்ற பிரச்னை வரலாம்.
சூரியனின் புறஊதாக் கதிர்கள், கண்களின் வெளிப்புறப் பகுதியையும் பாதிக்கலாம். அந்த வகையில், கண்ணின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி போன்ற பாதிப்பை இது ஏற்படுத்தும். இந்த பாதிப்பை டெரிஜியம் (Pterygium) என்று சொல்கிறோம்.

வெயிலின் தாக்கத்தால் கண்கள் பாதிக்கப்படுவதை நிச்சயம் தடுக்க முடியும். அதற்கு கூலிங் கிளாஸ் (Sunglasses) அணிய வேண்டியது மிக முக்கியம். வெளியே செல்லும்போது யுவி பாதுகாப்பு (UV Protection) உள்ள கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். இது மேற்குறிப்பிட்ட சிக்கல்களை 100 சதவிகிதம் தவிர்க்க உதவும். சூரியனை அதிக நேரம் நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் சூரியக் கதிர்களின் மோசமான பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment