'ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான 'ஹண்டாவைரஸ்' (Hantavirus) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்களோ அல்லது தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களோ வெளியிடப்படவில்லை. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார்களா என்பதும் மர்மமாகவே உள்ளது.
அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தசைவலி எனத் தொடங்கும். அடுத்த 72 மணி நேரத்தில் நுரையீரலைப் பாதித்து சுவாசத்தை நிறுத்தக் கூடியது. இதன் இறப்பு விகிதம் 50% ஆகும். இதற்குத் தற்போது தடுப்பூசியோ அல்லது பிரத்யேக மருந்தோ இல்லை.
தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) போலவே இருப்பதால், மருத்துவர்கள் இதைக் கண்டறிவதில் சவால்கள் உள்ளன. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.
Comments
Post a Comment