இளைஞர்களிடம் அதிகரிக்கும் மாரடைப்பு: `அதீத மகிழ்ச்சி, உடற்பயிற்சியும் ஆபத்தே'- மருத்துவரின் பகிர்வு!
ஹரியானா மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை பொது சுகாதாரத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் அந்த மாநிலத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 18,000 பேர் மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முன்பெல்லாம் இதய நோய்கள் என்பது முதியவர்களுக்கான பாதிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், ஹரியானாவின் இந்த புள்ளிவிவரங்கள் தற்போதைய சூழல் தலைகீழாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
இது தொடர்பாக மூத்த இதயநல மருத்துவர் வி.சொக்கலிங்கத்திடம் விரிவான உரையாடலை நிகழ்த்தினோம். அதன் சுருக்கத் தொகுப்பைப் பார்க்கலாம்...
``ஹரியானா அரசின் தகவல்படி பார்த்தால், இளமையில் வரும் இதய நோய் என்பது கொரோனா தொற்றுக்குப் பிறகே அதிகரித்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். பலரும் நினைப்பது போல, கோவிட் தொற்றுக்கோ அல்லது கோவிட் தடுப்பூசிக்கோ மாரடைப்புடன் நேரடித் தொடர்பு கிடையாது. கோவிட் என்பது ஒரு சுவாசப் பை சார்ந்த (Respiratory) வைரஸ். அது நுரையீரலைத் தாண்டி ரத்த நாளங்களைப் பாதிக்கும் சக்தி கொண்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.
உண்மையான காரணம் கோவிட் காலத்தில் ஏற்பட்ட அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute Stress) எனப்படும் திடீர் மன அழுத்தம் தான். வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, நெருங்கிய உறவினர்களின் மரணம் போன்ற காரணங்களால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
மன அழுத்தமும் இதயமும்: அறிவியல் பின்னணி
நமது மனநிலை பாதிக்கப்படும்போது உடலில் அட்ரினலின் (Adrenaline) மற்றும் கார்டிசால் (Cortisol) ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன.
இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் 'கொரோனரி தமனிகள்' (Coronary Arteries) வெறும் 2 முதல் 3 மி.மீ விட்டம் கொண்டவை. அதிக மன அழுத்தத்தால் இந்த ரத்த நாளங்களின் மென்மையான உட்புறப் படலம் (Endothelium) பாதிக்கப்பட்டு, அங்கு வெடிப்பு அல்லது அரிப்பு (Erosion) ஏற்படுகிறது. உடனடியாக அங்கு ரத்தம் உறைந்து, ரத்த ஓட்டம் தடைபடுவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. மூளையில் இதே நிகழ்வு நடந்தால் அது 'ஸ்ட்ரோக்' ஆக மாறுகிறது.
'பசி' ஹார்மோன்களும் தவறான உணவுமுறையும்
மன அழுத்தம் ஏற்படும்போது 'கிரெலின்' (Ghrelin) எனும் பசியைத் தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது நம்மை அதிகமாகச் சாப்பிடத் தூண்டுவதுடன், குறிப்பாகக் கொழுப்பு நிறைந்த உணவுகளை (Fatty Foods) தேடி உண்ணச் செய்யும். இதனால் உடல் எடை கூடி, சோம்பல் ஏற்பட்டு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தவறான பழக்கங்களுக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள். இது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை 20 வயதிலேயே கொண்டு வந்துவிடுகிறது.
மகிழ்ச்சி எனும் மருந்து: 'டோஸ்' (DOSE) ஹார்மோன்கள்
எதிர்மறை ஹார்மோன்களுக்கு எதிராக, நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கும் ஹார்மோன்களே நம் இதயத்தைக் காக்கின்றன. அவற்றை DOSE என்று அழைக்கலாம்:
-
D - டோபமின் (Dopamine)
-
O - ஆக்சிடாசின் (Oxytocin)
-
S - செரோடோனின் (Serotonin)
-
E - எண்டார்பின் (Endorphin)
இதில் எண்டார்பின் என்பது நமது உடலிலேயே சுரக்கும் மார்பின் போன்ற வலி நிவாரணி. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது இவை சுரந்து ரத்த நாளங்களில் எரோஷன் ஏற்படாமல் தடுக்கின்றன.
ஜிம்மிலும் - நடனம் ஆடும்போதும் மாரடைப்பு:
இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்குச் செல்லும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்ற மன அழுத்தத்துடனும் ஆவேசத்துடனும் பயிற்சி செய்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. ஜிம்மில் எடையைத் தூக்கும்போது அல்லது ஓடும்போது "நான் இதைச் செய்தே தீருவேன்" என்ற ஒருவித வெறியுடன் செய்யும்போது, உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களுக்குப் பதில் அட்ரினலின் மற்றும் கார்டிசால் சுரக்கிறது.
இந்த ஹார்மோன்கள் ரத்த நாளங்களில் திடீர் சுருக்கத்தையோ அல்லது அந்த மெல்லிய உட்புறப் படலத்தில் கிழிவையோ உண்டாக்குகிறது. அடுத்த நொடியே, ரத்தத்தில் உள்ள 'கிளாட்டிங் ஃபேக்டர்ஸ்' அங்கே ஒன்று கூடி ஒரு ரத்தக் கட்டியை (Thrombus) உருவாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை முற்றிலுமாகத் தடுப்பதால், ஜிம்மிலேயே மயங்கி விழுந்து 'சடன் கார்டியாக் டெத்' ஏற்படுகிறது.
மகிழ்ச்சி நல்லதுதான், ஆனால் அது "எக்ஸ்ட்ரீம்" ஆக மாறும்போது இதயம் அதைத் தாங்குமா என்பதும் முக்கியம். ஒரு திருமணத்திலோ அல்லது பார்ட்டியிலோ மிகத் தீவிரமாக, உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடும்போது உடல் ஒருவித அதிர்ச்சிக்கு உள்ளாகிறது.
பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும்போது 'எண்டார்பின்' சுரக்க வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு வெறித்தனமான அல்லது கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லும்போது, உடல் அதை ஒரு 'ஸ்ட்ரெஸ்' ஆகக் கருதி மீண்டும் அட்ரினலினைச் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்த நிலையில் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும். ஏற்கனவே ரத்த நாளங்களில் ஏதேனும் சிறிய அடைப்பு அல்லது பலவீனம் இருந்தால், இந்த அதீத வேகமும் அழுத்தமும் ரத்த நாளத்தைச் சிதைத்து மாரடைப்பை உண்டாக்கிவிடுகிறது
எனவே, ஜிம்முக்கு செல்லுங்கள், டான்ஸ் ஆடுங்கள்... ஆனால் அதை ஒரு மகிழ்ச்சியான மனநிலையுடன், ஆவேசம் இல்லாமல், அமைதியாக செய்யுங்கள். உங்கள் இதயம் ரசிக்கும்படி செய்யுங்கள், அதை மிரட்டும் வகையில் செய்யாதீர்கள். உடற்பயிற்சி என்பது உடலுக்கானது மட்டுமல்ல, அது மனதிற்கான ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆவேசமாகச் செய்யப்படும் எந்தவொரு செயலும் இதயத்திற்குப் பகைதான். முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
முக்கியமான பரிசோதனைகள்:
20 வயதைக் கடந்த (இப்போது 15 வயதிலிருந்தே பரிந்துரைக்கப்படுகிறது) அனைவரும் கீழ்க்கண்ட 5 பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும்:
-
ECI (ஈசிஜி)
-
எக்ஸ்-ரே (X-Ray)
-
ரத்த சர்க்கரை (Blood Sugar)
-
ரத்தக் கொலஸ்ட்ரால் (Blood Cholesterol)
-
ரத்த அழுத்தம் (Blood Pressure)
இவை 'சைலன்ட் கில்லர்ஸ்' எனப்படும் அறிகுறியில்லா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
81 வயதிலும் ஒரு மாத்திரை கூட உட்கொள்ளாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனது 60 ஆண்டுகால அனுபவத்தில் மூன்று முக்கிய வழிமுறைகளை எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்.
உணர்வு: எதையும் மாற்ற முடியாது என்றால் அதை மனதார ஏற்றுக்கொள். எக்ஸ்ட்ரீம் ஹாப்பினஸ் அல்லது எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ் இரண்டுமே ஆபத்தானது.
உணவு: பசிக்காக உண்ணாமல், உடலின் தேவை அறிந்து சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: தினமும் மிதமான மற்றும் முறையான உடற்பயிற்சி அவசியம்.
பிரச்னையற்ற மனிதன் உலகில் இல்லை. பிரச்னையைச் சுமக்காமல், இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்கப் பழகுங்கள். "கவலைப்படாதே... கவலைப்படுவது தீர்வாகாது" என்பதே இதய ஆரோக்கியத்தின் தாரக மந்திரம்." என்றார்.
Comments
Post a Comment