Kerala: "மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காணச் செல்வோம்" - ஆலின் ஷெரினின் பெற்றோர்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் - ஷெரின் ஆன் ஜான் தம்பதியினரின் ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம்.
பிறந்து 10 மாதங்களே ஆன ஆலின் ஷெரினுடன் ஷெரின் ஆன் ஜான் கடந்த 5-ம் தேதி காரில் பயணித்தபோது கோட்டயத்தில் வைத்து விபத்து ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் உள்ளிட்டோர் திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.
அதில், குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் மேல் சிகிச்சைக்காக கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.
கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் உடல் உறுப்புகள் தானம் செய்ததில் மிகவும் வயது குறைந்தவர் ஆலின் ஷெரின் ஆபிரகாம் என முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
குழந்தையின் இறுதிச்சடங்கு நிறைவடைந்த நிலையில் ஒரே மகளின் பிரிவால் துயருற்ற பெற்றோர், குழந்தையின் விளையாட்டுப் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது உறவினர்களைக் கலங்க வைத்துள்ளது.
இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் கூறும்போது, "குழந்தையுடன் காரில் சென்று விபத்தில் சிக்கியதில் காயம் அடைந்த ஷெரின் ஆன் ஜான் வீடு திரும்பியதும், குழந்தை மூளைச்சாவு அடைந்தது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் உறுப்புகளைத் தானம் செய்வது குறித்து குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் முதலில் சிந்தித்தார்.
இதுபற்றி குழந்தையின் அம்மா ஷெரின் ஆன் ஜானிடம் அவர்தான் தெரிவித்தார். குளமான கண்களுடன் ஷெரின் ஆன் ஜான் அதற்கு சம்மதித்தார். குழந்தையின் பெற்றோர் சம்மதித்ததைத் தொடர்ந்து கே-சோட்டோ இணையதளம் மூலம் உடல் உறுப்பு தானம் செய்ய உள்ளது குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை கேரளா காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் ஒத்துழைப்போடு குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன" என்றனர்.
குழந்தையின் பெற்றோர் கூறுகையில், "2025 ஏப்ரல் மாதம் 16-ம் தேதி காலை 9.20 மணிக்கு இந்த உலகில் அடியெடுத்து வைத்த எங்கள் மகள் பத்து மாதம் மட்டும்தான் எங்களுடன் இருப்பாள் என நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
இவ்வளவு குறுகிய கால வாழ்வில் ஐந்து குழந்தைகளின் நம்பிக்கையாக மாறியவள் எங்கள் தங்க மகள். அந்தக் குழந்தைகள் வடிவில் எங்கள் மகள் வாழ்கிறாள்.
இன்று எங்களைப் போன்று உலக மக்கள் அனைவரும் எங்கள் மகள் மீது அன்பு செலுத்துகிறார்கள். ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு பெற்றோராக எங்களைத் தேர்வு செய்த இறைவனுக்கு நன்றி. எங்கள் மகளின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்ட குழந்தைகளைக் காண நாங்கள் செல்வோம்" என்றனர்.
Comments
Post a Comment