Doctor Vikatan: என் உறவினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புண் இருக்கிறது. எல்லாவிதமான மெடிக்கல் செக்கப்பும் செய்து பார்த்துவிட்டார். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டார். ஆனாலும் பிரச்னை சரியாகவே இல்லை. இதற்கு இயற்கையான மற்றும் நிரந்தரமான தீர்வு இருந்தால் சொல்லுங்கள்....
-இலக்கியா, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி

வாய்ப்புண் என்பது பரவலாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். சரியான சாப்பாடு சாப்பிடாதது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, வாய் சுகாதாரம் பேணாதது, கூர்மையான பற்கள் இருப்பது போன்றவற்றால் அடிக்கடி வாய்ப்புண்கள் வரலாம். ஆனால், 3 வாரங்களுக்கும் மேல் வாய்ப்புண் இருந்தால், மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.
சத்துக்குறைபாடு, வெற்றிலை-பாக்கு பழக்கம், வாய் துர்நாற்றத்துக்காக எப்போதும் மிட்டாய் போன்ற ஒன்றை மெல்வது, அளவுக்கதிகமாக காபி, டீ குடிப்பது போன்றவற்றாலும் வாய்ப்புண் வரலாம்.
பொதுவாகவே, வாய்க்குள் நீண்ட நேரம் எதையாவது அடக்கி வைத்திருந்தாலே புண் வரும். வாய்ப்புண் வருவதற்கான பரவலான காரணம், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி சத்துக் குறைபாடுதான். பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், உங்கள் உறவினருக்கு 2 வருடங்களுக்கும் மேலாக அது பலனளிக்கவில்லை என்பதுதான் யோசிக்க வைக்கிறது.

தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும். பல் துலக்கும்போது பிரஷ் பயன்பாட்டில் கவனம் வேண்டும். இரண்டு மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பிரஷ்ஷின் முனைகள் விரிந்துவிட்டாலே அதை மாற்றிவிட வேண்டும்.
நம்மில் பலரும் பாத்ரூமுக்குள்தான் பிரஷ்ஷை வைப்போம். அது மிகவும் தவறானது. கழிவறையை ஃப்ளஷ் செய்யும்போது அங்குள்ள கிருமிகள் டூத் பிரஷ்ஷில் வந்து உட்கார்ந்துகொள்ளும். பல் துலக்கும்போது ஈறுகள் புண்ணாகும்படி அழுத்தித் தேய்க்கக்கூடாது. இரவில் பல் துலக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
நம்முடைய உணவுப்பழக்கத்தில் அசிடிக் உணவுகள்தான் அதிகம் இடம்பெறுகின்றன. காரமான, புளிப்பான உணவுகளையும் காபி, டீ போன்றவற்றையும் அதிகம் சாப்பிடுகிறோம். அதை மாற்ற வேண்டும்.
மணத்தக்காளிக் கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை - இந்த மூன்றுமே வாய்ப்புண்ணுக்கு மிகவும் நல்லது. இவற்றை பாசிப்பருப்பு சேர்த்து மசியலாகச் செய்து சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.
கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், வெள்ளைப்பூசணிக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி குறைபாடு ஏற்படாமலிருக்க நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
மாதுளம்பழமும் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. எனவே, மாதுளம்பழத்தையும் நெல்லிக்காயையும் ஜூஸ் போல செய்து தேன் கலந்து (நீரிழிவு இருந்தால் தேனை தவிர்க்கவும்) சிறிதளவு குடித்தால் போதும்.

நீரிழிவு உள்ளவர்கள் இந்த இரண்டையும் வெறுமனே மென்று சாப்பிட்டாலே போதும். காய்கறிகளில் கோவைக்காய் மிகவும் நல்லது.
பிஞ்சு கோவைக்காய் ஒன்றை பச்சையாக மென்று துப்பிவிடவும். பிறகு இன்னொரு கோவைக்காயை மென்று அதன் சாறு புண்களில் படும்படி சாப்பிடவும். இது வயிற்றுப்புண்ணுக்கும் மருந்து. சின்ன வெங்காயமும் வாய்ப்புண்ணை விரட்டும். இதை தயிர் சேர்த்துப் பச்சடியாகச் சாப்பிடலாம். பச்சை வாடை பிடிக்காதவர்கள், நல்லெண்ணெயில் வதக்கி, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் இரவில் மவுத்வாஷ் போல வாய்க் கொப்பளிக்கப் பயன்படுத்தலாம். பகலில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்து ஆயில் புல்லிங் முறையில் வாயில் வைத்திருந்துவிட்டு துப்பிவிடலாம். சித்த மருந்துக் கடைகளில் குங்கிலிய வெண்ணெய் என கிடைக்கும். அதை வாய்ப்புண்களில் தடவி வந்தால் எரிச்சல் குறையும். இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்னை தொடர்வதால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment