Skip to main content

Health: படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்... காரணங்களும் தீர்வுகளும் என்ன?

குழந்தைகள் இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒன்று. அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் நடக்கும் இந்தச் செயல்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற வேண்டும். அது 10, 15 வயதைக் கடந்த பிறகும் தொடர்ந்தால் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது; இது சரி செய்யக்கூடியதா என்று நரம்பியல் மருத்துவர் பெ.வெங்கடேஷிடம் கேட்டோம்.

''குழந்தைகள் இரவு நேரத்தில் தூக்கத்தின்போது சிறுநீர் கழிப்பதை `நாக்டர்னல் என்யூரிசிஸ்' (Nocturnal enuresis) என்பார்கள். இந்தப் பிரச்னை மரபுரீதியாகவும் வரலாம். தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை `பிரைமரி பெட் வெட்டிங்' (Primary Bedwetting), `செகண்டரி பெட் வெட்டிங்' (Secondary Bedwetting) என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம். 'பிரைமரி பெட்வெட்டிங்' என்பது நரம்பு தொடர்பான பிரச்னையால் வரலாம். சிறுநீர்த்தொற்று காரணமாகவோ, கால்சியத்தின் அளவு அதிகரிப்பதாலோ, சர்க்கரை நோய் பாதிப்பதாலோ ஏற்படுவது `செகண்டரி பெட் வெட்டிங்'.

bed wetting

செகண்டரி பெட் வெட்டிங் இல்லையென்றால் அவர்களுக்கு பிரைமரி பெட் வெட்டிங் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவோம். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம். உதாரணத்துக்கு, அந்தக் குழந்தைகளை இரவு 7 மணிக்கு மேல் நீர் அருந்தவோ, டீ, காபி அருந்தவோ கூடாது என்போம். மேலும் இரவில் அவர்களுக்கு இனிப்புப் பண்டங்களைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவோம். தூங்கச் செல்வதற்கு முன்பும், தூங்கி ஒரு மணி நேரம் கழித்தும் அவர்களை எழுப்பி சிறுநீர் கழிக்கப் பழக்கச் சொல்வோம். இதனை `நைட் லிஃப்டிங்' (Nigth Lifting) என்பார்கள். இதன்மூலம் அவர்களை இரவில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்போம்'' என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.

சித்த மருத்துவம் சொல்வதென்ன?

சித்த மருத்துவத்திலும் இந்தப் பிரச்னைக்கு மிக எளிதாகத் தீர்வு காணலாம் என்கிறார் சித்த மருத்துவர் ஜி.ராஜாசங்கர்.

"ஐந்து வயது நிறைந்த 20 சதவிகிதக் குழந்தைகள் இரவு நேரங்களில் தங்களையும் அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். ஏழு வயது வரையிலான குழந்தைகளில் 10 சதவிகிதம் பேரும், 12 முதல் 14 வயது வரையான குழந்தைகளில் மூன்று சதவிகிதம் பேரும் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். நான்கு வயது வரையிலான குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயற்கையே. இந்த விஷயத்தில் ஏழு வயது வரை அச்சப்பட ஒன்றுமில்லை. படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சியின்போது ஏற்படக்கூடிய இயல்பான ஒரு விஷயம்.

bed wetting

சிறுநீர்ப்பை நிறைந்துவிட்டது என்ற உணர்வைக் கொடுத்ததும் உடனே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தரும் மூளையின் சிக்னல் குழந்தைகளை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பும். ஆனால், அந்த நிகழ்வு நடக்காமல்போகும்போது அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள். இரவில் சிறுநீரின் அளவைக் கட்டுப்படுத்தும் `வாசோப்ரெசின்' (Vasopressin) என்ற ஹார்மோனின் செயல்பாடு சமச்சீராக இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாகும். தூக்கத்தில் உண்டாகும் மூச்சுத்திணறலின்போதும் கூட, அதாவது சுவாசப் பைக்குத் தடையின்றி செல்லும் உயிர்காற்று குறைபாட்டாலும்கூட இது ஏற்படலாம். சிலருக்குக் குறட்டை (Sleep apnea) வரும்போது இப்படி ஏற்படலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் மற்றும் அடினாய்டு அழற்சியினாலும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் கவனச்சிதறல் நோயினாலும் (ஏடிஎச்டி - ADHD - Attention Deficit Hyperactive Disorder) இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

பரம்பரையாக வருமா?

கவனச்சிதறல் உள்ள குழந்தைகளுக்குச் சுட்டித்தனம் அதிகம் இருப்பதுடன் அவர்கள் பொறுமையிழந்து காணப்படுவார்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர்களுக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். இதற்குப் பரபரப்பும் பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். தினமும் ஒழுங்காக மலம் கழிக்காத குழந்தைகளுக்கு மலக்குடல் சிறுநீர்ப்பையை அழுத்தும்போது அவர்கள் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிக்கலாம்.

kid

இவை தவிர ஒரே நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழிவது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குப் பரம்பரையும் மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. பெற்றோரில் ஒருவருக்குச் சிறுவயதில் இந்தப் பிரச்னை இருந்திருந்தால் 40 சதவிகிதமும், இருவருக்கும் இருந்தால் 70 சதவிகிதமும் பரம்பரையாக இந்த பாதிப்பு ஏற்படலாம். வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பதாலும், பள்ளி மாறுவதாலும், பெற்றோரிடையே உண்டாகும் சிறு பிணக்குகளாலும்கூட குழந்தையின் மனம் பாதிப்புக்குள்ளாகி இந்நிலை உண்டாகலாம்.

பெற்றோர்களின் பொறுப்பு

மருந்துகளைவிடச் சரியான வாழ்வியல் முறைகளே இதற்கான தீர்வு. திரவ உணவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் கொடுக்கக்கூடாது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் தினமும் சிறுநீர் கழிக்கச் செய்ய வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இதைச் செய்து பின்னர் படுக்கைக்குச் செல்வது நல்லது. இது ஒரு பிரச்னையே அல்ல சரி செய்து விடலாம் என்ற முற்போக்கு சிந்தனையைக் குழந்தைகளுக்கு உண்டாக்க வேண்டும். இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காத அடுத்த நாள் காலை நோபல் பரிசு கிடைத்த உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதைவிடப் பெரிய மருந்துகள் எதுவும் இல்லை. பெற்றோர் மிகவும் பொறுமையாக இதைக் கையாள வேண்டும். மற்றவர்கள் முன் எக்காரணம் கொண்டும் இதைப்பற்றி விமர்சித்தோ கேலி செய்தோ பேசக்கூடாது.

Chocolate

`கஃபைன்' (caffeine) கலந்த உணவுகள் கொடுப்பதைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகளில் கஃபைன் உள்ளதால் அதைத் தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகரிக்கும்போது வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் சிறுநீர்ப்பையை அழுத்துவதாலும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம்.

ஃபோலிக் ஆசிட் (Folic acid) நிறைந்த உணவுகளான பச்சைக் காய்கறிகள், கீரைகள், வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சுப் பழங்கள், பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள் சாப்பிட்டால் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்னையிலிருந்து விடுபடலாம். பி-12 சத்து நிறைந்த புலால் உணவுகளை வாரம் ஒருமுறை கொடுக்கலாம். ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி-12 உணவுகள் மூளையின் நடுவே உள்ள நரம்பு தொடர்பைப் பலப்படுத்தி இரவில் சிறுநீர் பிரிவதைத் தடுக்கும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களும் மிகவும் நல்லது. முளைக்கட்டிய தானியங்களில் ஃபோலேட் சத்து அதிகமுள்ளது என்பதால் அவற்றைச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுக்கலாமா?

நெல்லிக்காயில் உள்ள தாவரக்கூறுகள் சிறுநீர்ப்பையின் தசைகளைப் பலப்படுத்தும் என்பதால், அவற்றைத் தேனுடன் சேர்த்தோ தனியாகவோ கொடுக்கலாம். பெருஞ்சீரகத்தைப் பொடியாக்கி அரை டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் நோய் குணமாகும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

சித்த மருத்துவர் ஜி.ராஜாசங்கர், டாக்டர் வெங்கடேஷ்

பாலும் பால் பொருள்களும் உடலில் கால்சியம் சத்தை அதிகரித்து இரவில் சிறுநீர் வெளியேறுவதைத் தூண்டுவதால் குழந்தைகளுக்கு இரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும். சர்க்கரையும் மைதாவும் சேர்ந்த பொருள்கள் சிறுநீர்ப்பையின் அழற்சியை அதிகமாக்கும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

சித்த மருத்துவப் புரிதலின்படி வாதத்தைக் கட்டுப்படுத்துவதே இதற்கான முழுத் தீர்வு. மலம் அல்லது சிறுநீர் அதிகரித்தாலும் அளவில் குறைந்தாலும் வாதம் அதிகரித்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும். மனதின் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, சித்த மருத்துவரை அணுகி காலத்துக்கேற்றபடி நல்லெண்ணெய்க் குளியல், பேதி மருந்துகள், கிருமிக்கான மருந்துகள் மற்றும் ஊட்டம் நிறைந்த உணவுகள் பற்றிய அறிவுரைகளைப் பெற்று குழந்தைகளுக்கான இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம்" என்கிறார் மருத்துவர் ராஜாசங்கர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...