Skip to main content

Doctor Vikatan: பார்வையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானதா கான்டாக்ட் லென்ஸ்?

Doctor Vikatan: சமீபத்தில் நடிகை ஒருவர், தான் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸால், தனக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டதாகவும், பார்வை சரியாகத் தெரியாமல் போனதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று சாமானியர்களிடம் கான்டாக்ட் லென்ஸ் அணிகிற வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை பகிர்ந்திருந்த விஷயம் அதிர்ச்சியளிக்கிறது. அப்படியானால் பார்வையை பாதிக்கும் அளவுக்கு அவை ஆபத்தானவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.  

விஜய் ஷங்கர்

கண்ணாடி அணிய விரும்பாதவர்களுக்கும், கண்ணாடியைத் தவிர்க்க நினைப்போருக்கும் கான்டாக்ட் லென்ஸ் மிகச் சிறந்த ஆப்ஷன் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், அதில் சில மைனஸ் விஷயங்களும் உள்ளதை மறுப்பதற்கில்லை.

கான்டாக்ட் லென்ஸ் அணிவது என முடிவு செய்துவிட்டால், அடிப்படையான சில விஷயங்களை அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். லென்ஸை மிகச் சரியாக அணிய வேண்டும். உபயோகித்துக் கழற்றியதும் அவற்றுக்குண்டான பிரத்யேக திரவத்தில்தான் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

லென்ஸை அதற்குரிய கேஸில் (டப்பாவில்) தான் பத்திரப்படுத்த வேண்டும். அந்த பாக்ஸானது முறையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றில் எதைச் செய்யத் தவறினாலும் இன்ஃபெக்ஷன் வரலாம். அந்த இன்ஃபெக்ஷனானது கண்கள் முழுவதும் பரவலாம்.

கண்

கான்டாக்ட் லென்ஸ் அணிவதில் உள்ள மிக முக்கியமான மைனஸ், அதனால் ஏற்படும் 'ஹைப்பாக்ஸியா' ( Hypoxia) பிரச்னை.  ஹைப்பாக்ஸியா என்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிற நிலை.  லென்ஸ் அணிவதால் கண்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதன் விளைவாக, பார்வை மங்குதல், வலி, கண்களில் நீர் வடிதல், சிவந்துபோவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும். கான்டாக்ட் லென்ஸ் அணிவோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அதனால், இந்தப் பிரச்னைகளையும் அவர்களே அதிகம் சந்திக்கிறார்கள். கான்டாக்ட் லென்ஸை அவசரமாகப் போட்டுக்கொள்ளும்போது, அவர்களின் கருவிழிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

கார்னியா எனப்படும் கருவிழி எபித்தீலியம் (Epithelium) , போமன்ஸ் லேயர் (Bowman's layer), ஸ்ட்ரோமா (Stroma), டெஸ்மெட் மெம்ப்ரேன் (Descemet's membrane) மற்றும் எண்டோதீலியம் (Endothelium) என ஐந்து லேயர்களை கொண்டது. வெளியில் உள்ள எப்பிதீலீயம் என்கிற லேயரில், விரல் நகம் பட்டு பாதிக்கப்படலாம்.  எபித்தீலியம் பாதிப்பாலும் பார்வை மங்குதல், சிவந்துபோவது, கண்களில் நீர்வடிதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்கு கண் மருத்துவரால்தான் சிகிச்சை அளிக்க முடியும்.  கண்களைப் பரிசோதித்துவிட்டு, மருத்துவர் ஆன்டிபயாடிக் ஆயின்மென்ட், டிராப்ஸ் உள்ளிட்டவற்றை 24 மணி நேரத்துக்குப் பரிந்துரைப்பார். ஒருவேளை இதில் பிரச்னை குணமாகவில்லை என்றால், அடுத்தகட்ட சிகிச்சை என்ன என்று சொல்வார்.

கண் பரிசோதனை

எனவே, கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. அதைச் சரியாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். லென்ஸ் அணிவதால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...