Skip to main content

Doctor Vikatan: அளவுக்கதிக களைப்பு... பணியிடத்தில் தூக்கம்.. ஏதேனும் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan:  நான் 36 வயதுப் பெண். வேலை பார்க்கிறேன்.  பகல் வேளைகளில் எப்போதும் களைப்பாக உணர்கிறேன். இரவில் 7 மணி நேரம் தூங்குகிறேன். ஆனாலும், காலையில் எழுந்திருந்த பிறகும் புத்துணர்வாக உணர முடிவதில்லை. என் களைப்பு காரணமாக வேலையிலும் சிரமங்களைச் சந்திக்கிறேன். பணியிடத்தில் தூக்கம் வருகிறது. அதீத களைப்பு என்பது ஏதேனும் பெரிய பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம்.

அடுத்தது உறக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்தநாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். அவர்களுக்கு 'ஸ்லீப் ஆப்னியா' (Sleep apnea) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது தூங்கும்போதே ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். குறட்டை விடுவார்கள், திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிடுவார்கள்.

இப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு 'ஸ்லீப் ஸ்டடி' (Sleep Study) என்ற பரிசோதனையில் தூக்கத்தை ஆய்வுசெய்தால்,  தூங்கும்போது ஆக்ஸிஜன் குறைவாக இருப்பது தெரியவரும். இவர்களுக்கு சிபாப் (CPAP Machine) என்ற மெஷினை முகத்தில் மாட்டிக்கொண்டு தூங்கச் சொல்வோம். இவர்களுக்கெல்லாம் இதயநோய், மாரடைப்பு போன்றவை வரும் ரிஸ்க் அதிகம். போதுமான அணவு தண்ணீர்  குடிக்காதவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கலாம். தூக்கத்தோடு சேர்த்து உப்பும் இவர்களுக்குத் தேவையாக இருக்கலாம்.  இவர்கள் ஓஆர்எஸ் பவுடர், சாதம் வடித்த கஞ்சியில் உப்பு சேர்த்தது, நீர்மோர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குடித்தால் களைப்பு நீங்கும். 

பணியிடத்தில் தூக்கம்

இந்தியாவில் 50 சதவிகிதத்தினருக்கும் மேல் ரத்தச்சோகை இருக்கிறது. குறிப்பாக, பெண்களில் 10-ல் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது ஆய்வுகளில் தெரிகிறது. ரத்தச்சோகை இருக்கும் பெண்கள் எப்போதும் களைப்பாக உணர்வார்கள். இவர்கள் எல்லோரும் தினமும் கொத்தமல்லி சட்னியோ, கறிவேப்பிலை சட்னியோ, புதினா சட்னியோ செய்து சாப்பிட வேண்டியது மிக அவசியம். வாரத்தில் 3-4 நாள்களுக்கு கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒருநாளாவது அகத்திக்கீரையோ, முருங்கைக்கீரையோ சாப்பிடலாம். இவையெல்லாம் ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

ஹைப்போதைராய்டிசம் பாதிப்புள்ள பெண்களுக்கும் எப்போதும் களைப்பு இருக்கலாம். எனவே, நீங்கள் களைப்பாக உணர்வதற்கு மேற்குறிப்பிட்டவற்றில் எந்தக் காரணம் உங்களுக்கு இருக்கக்கூடும் என்பதைப் பார்த்து, அதற்கேற்ப சிகிச்சைகள், உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டாலே தானாகச் சரியாகும். மருத்துவரை அணுகி அடிப்படையான பரிசோதனைகளைச் செய்து பாருங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...