Skip to main content

Doctor Vikatan: எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவர் தினமும் காலையில் இளநீர் குடிப்பதை பல வருடங்களாகப் பின்பற்றி வருகிறார். வெயில் காலத்தில் மட்டுமன்றி, மழை, குளிர்காலங்களிலும் குடிப்பார்.   இப்படி தினமும் இளநீர் குடிப்பது சரியானதா... அதனால் ஆரோக்கியம் மேம்படுமா... எல்லோரும் தினமும் இளநீர் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

இளநீரில் பொட்டாசியம் சத்து மிக அதிகம். பொட்டாசியம் சத்தானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானது.  வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது நீரிழப்பை ஈடுசெய்ய இளநீர் பெரிதும் உதவும். இதயநலன் காப்பதிலும் இளநீருக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆன்டிஏஜிங் தன்மைகள் கொண்டது என்பதால், அடிக்கடி இளநீர் சாப்பிடுவோருக்கு முதுமைத்தோற்றம் தள்ளிப்போகும். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். 'என்னுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது' என்று சொல்பவர்கள்,  மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை கணக்கிடும் ஹெச்பிஏ1சி (HbA1c ) பரிசோதனையில், ரத்தச் சர்க்கரையின் அளவானது 7-க்குள் இருக்கும் நிலையில்,  வாரம் இருமுறை இளநீர் குடிக்கலாம்.  அது இன்ஸ்டன்ட் எனர்ஜியை கொடுக்கும். அதுவே, ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இல்லை என்பவர்கள் நிச்சயம் இளநீர் குடிக்கவே கூடாது.

HbA1c

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.  இவர்கள் இளநீர் குடிக்கும்போது பொட்டாசியம் அளவு சட்டென அதிகரித்துவிடும் என்பதால் இளநீர் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இளநீரைப் போலவே அதன் உள்ளே உள்ள வழுக்கைப் பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. உதாரணத்துக்கு வயிற்றின் உள்பகுதியை ஆற்றும் தன்மை  கொண்டது என்பதால் செரிமான பிரச்னைகள் நீங்கும்.

டீஹைட்ரேஷன் (Dehydration) எனப்படும் நீர்வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு இல்லாத நிலையில் தினமும் 2 இளநீர் கூட குடிக்கலாம்.  உடற்பயிற்சி செய்வோர், காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். மற்றபடி உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் தினமும் ஒரு இளநீர் குடிக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...