Skip to main content

`உப்பு… அளவு அளவா இருக்கணும்! மீறினா...?’ - எச்சரிக்கும் மருத்துவர்

ஒரு சராசரி இந்தியர் தினமும் 8 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 5 கிராம் அளவைவிட மிக அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் உப்பு உட்கொள்ளல் பற்றிய விழிப்புணர்வு, நடத்தை ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தினமும் சராசரியாக 7.1 கிராம் அளவு உப்பும், ஆண்கள் தினசரி 8.9 கிராம் உப்பும் எடுத்துக்கொள்வது தெரியவந்துள்ளது.

உப்பு

ஒருவர் தன் உணவில் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்வதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், அகால மரணம், இரைப்பை புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறபடுகிறது. ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்வதைக் குறைப்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கையை 25% வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் அதிக உப்பு எடுத்துக்கொள்வதன் விளைவுகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட பொது மருத்துவர் அருணாசலம்,

“ சோடியம் குளோரைடு என்ற உப்பு உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் மிகவும் தேவையானது. சோடியம் அதிகமாக எடுக்கும்போது உடல் தண்ணீரை அதிகமாகச் சேர்த்துவைத்துக்கொள்ளும். இதனால் உடலில் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படும். உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் அதிகமானால் அதைத்தொடர்ந்து ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் ஆகியவையும் வரலாம்.

Blood Pressure

அதேபோல் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். மூளைக்கு சோடியம் தேவை... அது கிடைக்கவில்லை என்றால் உடல் செயலிழந்துவிடும். மேலும் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் குறையும், தசைகள் பலவீனமாகும். அதனால் நம் உணவில் சோடியம் குறையவும் கூடாது, அதிகமாகவும் கூடாது. ஐந்து கிராம் உப்புதான் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் 8 கிராம் வரை எடுத்துக்கொள்வதால் நிச்சயம் உடல்நலம் பாதிக்கப்படும்.

நாம் வெளியில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து பொருள்களிலும் உப்பு இருக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் விற்கப்படும் நான்வெஜ் உணவுகளில் காரம், மசாலா, உப்பு என அனைத்துமே வீட்டுஉணவை விட அதிகமாகவே இருக்கும். நம் அன்றாட வாழ்வில் உப்பு அதிகமானதற்கு, வெளியில் உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்ததும் மிக முக்கிய காரணம். இதனால் தான் இளம் வயதினர் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிக உப்பு எடுத்துக்கொள்வதால் உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

டாக்டர். அருணாச்சலம்

ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தாலே அவர் நிச்சயமாக தங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும், மேலும் வெளியில் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும், முக்கியமாக ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவுப்பொருள்களில் சோடியம் அதிகமாக இருந்தால் எந்த நுண்ணுயிரிகளும் அதை தாக்காது என்பதால் உணவு பதப்படுத்தலுக்கு உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது போக சாலையோரங்களில் கிடைக்கும் மாங்காய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய் ஆகியவற்றிலும் மிக சாதாரணமாக நாம் உப்பு சேர்த்தே சாப்பிடுகிறோம் அவற்றையெல்லாம் தவிர்க்கலாம். நம் உணவில் எதில் எல்லாம் தேவையில்லாமல் உப்பு சேர்க்கிறோமோ அதையெல்லாம் குறைத்தால் நல்லது” என்கிறார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...