Skip to main content

பள்ளிகளில் விலையில்லா நாப்கின் திட்டம் எப்படி செயல்படுகிறது? தமிழக ரவுண்ட் அப்! | #MHDay2023

ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது உள்ளிட்டவையே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கம்.

என்னதான் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் நாம் பின்தங்கியிருக்கிறோம். அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில நம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும்.

மாதவிடாய்

சிறுமியர், மாணவியருக்கு மாதவிடாய் சுகாதாரம் கிடைக்கச் செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளில், பருவமடைந்த மாணவிகள், பெண்களுக்கு `புதுயுகம்' என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மாணவிகள் ஆசிரியையிடமும், பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியர் அல்லது அங்கன்வாடி பணியாளரிடமும் நேப்கின்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த திட்டத்தின் தற்போதைய செயல்பாடு எந்தளவில் உள்ளது, சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதன் நோக்கம் மாணவிகளுக்கு நிறைவேறி உள்ளதா? இதுகுறித்து, விகடன் நிருபர் குழு, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகள் சிலரை சந்தித்துப் பேசியது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லில்லி கூறுகையில், ``மாணவிகளின் சுகாதாரத்தில் அதிக கவனமாக இருக்கிறோம். அவர்களின் மாதவிடாய் சிரமத்தைப் போக்க, பள்ளியில் கழிவறை அருகே ஓர் அறையில், அரசு வழங்கும் சானிட்டரி நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதனை, ஆசிரியைகளின் உதவியோடு மாணவிகள் எடுத்துப் பயன்படுத்திக்‌ கொள்ளலாம்.

அரசால் வழங்கப்படும் நாப்கின், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை என ஒவ்வொரு முறையும் மூன்று பாக்கெட் வழங்கப்படுகிறது. 5-ம் வகுப்பிலேயே சிலர் பருவம் அடைந்திருந்தால், அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. நாப்கின் விநியோக விவரங்கள் மாணவிகளின் கையொப்பங்களுடன் கணக்கிடப்படுகிறது" என்றார்.

நாப்கின்

நாப்கின் எரிக்கும் மெஷின் தேவை!

சேலம் ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் பள்ளி மற்றும் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு மாணவிகளிடம் பேசியபோது ``அரசு சானிட்டரி நாப்கின்கள், வருடத்திற்கு குறைந்தது 6 பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஏழ்மை நிலை மாணவிகளுக்கும், குடும்பத்தில் அதிக பெண்கள் இருக்கும் மாணவிகளுக்கும் அதிக நாப்கின்கள் வழங்கப்படுகின்றன" என்றனர்.

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் நம்மிடம் பேசியபோது, ’’போதுமான அளவில் மாதவிடாய் நாப்கின்கள் அரசு தரப்பில் தரப்படுகிறது. போதாமல் கூடுதல் நாப்கின் கேட்டாலும் தருகின்றனர். நாப்கின் தரமாக உள்ளது. நிதிச்சுமையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு இது பேருதவியாக உள்ளது’’ என்றனர். ஒரு சில தனியார் அமைப்புகளும் இச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.

மதுரை மற்றும் பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ``ஒவ்வொரு பருவத்துக்கு‌ ஒருமுறையும் பள்ளிகளுக்கு நாப்கின் கொண்டு வந்து தரப்படுகிறது. அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செவிலியர் ஒருவர் பொறுப்பாக இருந்து இதனை வழங்குவார். ஆசிரியர் ஒருவரும் பொறுப்பாக இருந்து மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப வாங்கி வருவார். அரசுப் பள்ளியென்றால் எதுவும் சரியாக இருக்காது என்ற பார்வை உள்ளது. ஆனால் இங்கு எல்லாமே முறையாகச் செய்கிறோம். அரசின் இலவசப் பொருள்களை பிள்ளைகளுக்குச் சரியான முறையில் வழங்குவதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரம், நாப்கினை முறையாக அப்புறப்படுத்தும் வசதியின்றி சிரமப்படுகிறோம். எனவே, பயன்படுத்திய நாப்கினை எரிக்கும் சாதனத்தை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்" என்றனர்.

விஜயராணி

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்!

மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் ஜோதி மேல்நிலைப்பள்ளியில், இதற்கான பொறுப்பாசிரியரான விஜயராணியிடம் பேசினோம். ``நாப்கின் வழங்கும் விவரங்களை பரமாரிக்க தனி நோட் வைத்திருக்கிறோம். மாணவிகளின் கையெழுத்தைப் பெற்ற பிறகே வழங்குகிறோம். அவ்வப்போது மாணவிகளுக்கு கூட்டம் நடத்தி, நாப்கின் பயன்பாடு, மாதவிடாய் சுகாதாரம், பயன்படுத்தியதை அகற்றும் முறை, எரிக்கும் மெஷினை பயன்படுத்துவது குறித்து சொல்லித் தருகிறோம்" என்றார்.

அப்பள்ளியின் மாணவி ஒருவரிடம் பேசியபோது, ``எங்கள் பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்புக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். வகுப்பில் பீரோ பக்கத்தில் உள்ள அட்டைப் பெட்டியில் இருந்து, தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல், பயன்பாட்டுக்குப் பிறகு மாடியில் உள்ள எரிக்கும் மெஷினில் எரிந்த்துவிடலாம்" என்றார்.

நாப்கின் எரிக்கும் இயந்திரம்

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி நிலைப்பள்ளி மாணவிகளிடம் பேசினோம். ``எங்களுக்கு இந்த வருடத்திலிருந்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று பாக்கெட் நாப்கின் வழங்குகிறார்கள். இதனால் சுகாதாரமாக இருக்க முடிகிறது. வெளியே வாங்கும் தேவை ஏற்படுவதில்லை என்பதால், வீட்டிற்கும் உதவிகரமாக உள்ளது" என்றனர்.

அப்பள்ளியின் தாளாளர் மேரி கூறுகையில், "எங்கள் பள்ளிக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இலவச நாப்கின்கள் அளிக்கப்படுகின்றன. நாப்கின் வழங்கவும், அதைச் சார்ந்த செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் தனி ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளோம். மாதவிடாய் சுகாதாரம், அது குறித்த விழிப்புணர்வை மாணவிகளுக்கு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

விதிமீறல்களும் உள்ளன!

இலவச நாப்கின் திட்டத்தால் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம், ஒருசில பள்ளிகளில் மாணவியரிடம் பேசியபோது சில விதிமீறல்கள் நடப்பதும் தெரிய வருகிறது. சானிட்டரி நாப்கின்களை, மாணவிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களில் சிலர், அப்பணியை முறையாகச் செய்வதில்லை. நாப்கின் வழங்குவதற்கு மாணவிகளிடம் பணம் வசூலிப்பது, மூன்று நாப்கின் பாக்கெட்டுகள் கொடுக்கும் இடத்தில் இரண்டு பாக்கெட்டுகள் மட்டும் தருவது, மாணவிகளுக்கான விலையில்லா நாப்கின் பாக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

அரசின் விலையில்லா நாப்கின்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி முன்னாள் மாணவி ஒருவர், தான் பள்ளியில் படித்த போது பள்ளி நிர்வாகம் ஒரு நாப்கினை 20 ரூபாய் பெற்றுக் கொண்டு வழங்கியதாகக் கூறினார். அரசுப் பள்ளிகளை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இப்பள்ளிகளுக்கு அரசு நாப்கின் வழங்குகிறது. இதனால் ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை இரண்டு பாக்கெட்டுகள் தான் கிடைப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். அதேபோல், அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலரும், மாணவிகளுக்கான விலையில்லா நாப்கினை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அரசின் விலையில்லா நாப்கின் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம், அதை எரியூட்டத் தேவையான சாதனங்களையும் வழங்க வேண்டும். அதேபோல், சில இடங்களில் இத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைக் களைய வேண்டும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...