Skip to main content

புரையோடிப்போன சிந்தனைகள்; புரிந்து கொள்ளப்படாத மாதவிலக்கு துயரங்கள்! |#MHDay2023

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும்கூட மாத விலக்கு என்பது முற்றிலும் ``பொம்பிளைங்க சமாச்சாரமாக”வே நீடிக்கிறது. பாலியல் கல்வியின் பகுதியாக நம் குழந்தைகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இந்த இயற்கை நிகழ்வு பற்றிய தெளிவு, பாலியல் கல்வியை ஏற்காத நம் கல்விமுறையால் முடக்கப்பட்டுவிட்டது. புற வாழ்க்கையை மிக நவீனமாக வடிவமைத்துக் கொண்டுள்ள நம் சமூகம், உள்ளுக்குள் மிகவும் பழைய சிந்தனைகளால் புரையோடிப்போய் இருக்கிறது.

periods blood

மாதவிலக்கு குறித்த எண்ணற்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றை நம் சமூகம் வாசிக்கவில்லை. பொதுவாகவே நம் சமூகம் புத்தக வாசிப்பில் ஆகக்கடைநிலையில் நிற்கும் சமூகம்தான். அதிலும் மாதவிடாய் பற்றி எங்கே வாசிக்கும்? ஆகவே ஆண்களுக்குத் திருமணமான பிறகுதான், மனைவி வழியாக மாதவிலக்கு பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கிறது. தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு ஆண் சிறுகதை எழுத்தாளர்களில் யாரேனும் மாதவிலக்கு பற்றி எழுதியிருக்கிறார்களா என்று துருவிப் பார்க்கும் ஆவல் எழுந்து பார்த்தபோது, இரண்டே இரண்டு கதைகள் கிடைத்தன.

பிரபஞ்சன் எழுதிய `3 நாட்கள்' என்கிற அற்புதமான கதை ஒன்று...

``மாதம்தோறும் விலக்கு ஏற்படும் 3 நாள்களும், சுமதி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பது மாமியாரின் கட்டளை. அவ்வளவு ஆச்சாரமும் மடியுமாக வாழ்பவர் மாமியார். மட்டும ன்றி வீடும் சின்னது. மாதவிலக்கு நாள்களில் அவளைத் தூரமாக உட்கார வைக்கத் தனி அறையோ பின்பக்கத் தோட்டமோ ஏதும் இல்லாத சிறு வீடு. ஆகவே மாதாமாதம் சுமதி ரயிலேறி அம்மா வீட்டுக்குப் போகிறாள். குளித்துவிட்ட நான்காம் நாள் கிளம்பி, மீண்டும் கணவன் வீடு. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. குளிச்சிட்டுத்தான் இருக்கிறாள் என்பதை, மாதாமாதம் அண்டை வீட்டாருக்கெல்லாம் அறிவிப்பதாக இருக்கின்றன அவளது மாதாந்தரப் பயணங்கள். அதில் அவள் மிகவும் கூசிப்போகிறாள். படுக்கையில் கணவனிடம் முறையிடுகிறாள்:

Period cramps

"இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியற விஷயமா? என் ரகசியத்துல உங்களுக்குப் பங்கில்லையா.. எனக்கு அவமானம்னா அது உங்களுக்கும் இல்லையா... மாசாமாசம் அதை நினைச்சாலே பகீர்னு வருதுங்க. அவமானத்தால செத்துக்கிட்டு இருக்கேன். நீங்களாவது மாமிக்கு இதை எடுத்துச்சொல்லக்கூடாதா?"

``….."

``ஏண்ணா…" இலேசான குறட்டை ஒலி அவனிடமிருந்து வெளிப்பட்டது. நிர்கதியாகிவிட்டது போல் இருந்தது அவளுக்கு.."

பெண்களின் உள்காயங்களுக்கு மருந்திடுவது இரண்டாவது பிரச்னை. அவர்கள் காயம்பட்டு நிற்பதை, அது என்னவென்றே கூட அறிந்து கொள்ளத் துப்பற்றவர்களாகக் குறட்டைவிடும் ஜீவராசிகளாக ஆண்கள் இருப்பதைச் சுளீர் எனக் கூறும் கதை இது.

இன்னொரு கதை ச. சுப்பாராவ் எழுதிய ``தாத்தாவின் டைரி"...

கணவனை இழந்தவளான தன் மருமகள் கற்போடு இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் விலக்காகும் தேதிகளை மாதம் தவறாமல் தன் டைரியில் குறித்து வைத்துக் கண்காணிக்கும் பெரியவரை பற்றிய கதை இது. நம் சமூகத்தில் ஆண்களுக்கு இதெல்லாம் தெரியாததால்தான் இலக்கியத்திலும் பெரிசாக ஒண்ணும் வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆண், பெண்

ஆண்கள் பெண்களுக்கிடையிலான உரையாடல்களே அரிதாக இருக்கும் நம் கட்டுப்பெட்டிச் சமூக வாழ்வில் பெண்களின் எந்தத் துயரம்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது? கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்ப்பது ஓரளவுக்கு ஆண்கள் மனங்களில் புரிந்துணர்வை ஏற்படும்.

கீதா இளங்கோவனின் மாதவிடாய் என்கிற ஆவணப்படம், திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் ஆண்கள் தங்கள் அறியாமை குறித்து வெட்கப்படுவதையும் குற்ற உணர்வு கொண்டு பேசுவதையும் ஒவ்வொரு திரையிடலின்போதும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற முயற்சிகளும் தொடர வேண்டும்.

- ச.தமிழ்ச்செல்வன்


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...