Skip to main content

அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்...

மருத்துவர் சரவண பாரதி.

என்னென்ன பாதிப்புகள்?

``சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை Heat waves எனக் கூறுவோம். இந்தியாவில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை இந்த வெப்ப அலைகளை உணரலாம். சில சமயத்தில், ஜூலை வரை கூட இது நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வெப்ப அலைகளை இந்தியாவில் பார்க்க முடியும்.

வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது, நம் உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் உடலின் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும். வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தச் செயல் கடினமானதாக மாறும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தசைவலி, அதீத அசதி, மயக்கம், வலிப்பு, தலைவலி, வாய் குழறுதல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி என பல்வேறு விதமான பாதிப்புகளை இந்த அதிக வெப்பம் ஏற்படுத்தலாம். சில சமயம் மரணம்கூட நிகழலாம்.

வெப்ப அலையும் முதலுதவியும்!

இதைத் தடுப்பதற்கு உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். யாராவது வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டால் அதற்கான முதலுதவி முறைகள் உள்ளன.

* பாதிக்கப்பட்டவரை, வெயிலில் இருந்து நிழலான ஒரு பகுதிக்கு கொண்டு வர வேண்டும்.

* அவரின் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் தளர்வாக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்து, கால்களை சற்று உயர்வாக வைக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய‌ வேண்டும்.

* ஸ்பான்ஜை பயன்படுத்தி உடலில் நீரால் ஒற்றடம் கொடுக்கலாம்.

கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் முக்கிய கவனம் தேவை. வெயில் அதிகமாக அடிக்கும்‌ போது அவர்களை வெளியே விளையாட அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்" என்று மருத்துவர் சரவண பாரதி தெரிவித்தார்.

அம்மை

அச்சுறுத்தும் அம்மை!

கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றி சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.. ``கோடை காலத்தில் பொதுவாக அம்மை, மஞ்சள்காமாலை போன்ற வைரஸால் ஏற்படும் நோய்கள் அதிகம்‌ பரவும். குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வற்றுவதால் நீர் மாசுபாடு கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் நீர் மூலம் பரவும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படலாம். இது தவிர சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் இந்தக் கற்கள் உருவாகி அவற்றின் தாக்கம் கோடை முடிந்து ஜூலை மாதத்தில்தான் தெரியத் தொடங்கும்.

கோடையில் வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும் உண்டாகும். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் உடலில் உப்புச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு வரலாம். இது தவிர, முக்கியமாக அதீத வெயிலில் நேரடியாக செல்லும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவை வெகுவாகக் குறைந்து மூர்ச்சை (Sunstroke) ஏற்படக்கூட வாய்ப்புள்ளது‌.

உடல் சூட்டை குறைக்கும் பழச்சாறு, இளநீர்

வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, சில வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய காலங்களில் வெளியே சென்றால் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. இது வெயில் நேரடியாக உச்சந்தலையில் படாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை. எனவே நாமும் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது நேரடியாக தலையில் வெயில் படுவதைத் தவிர்க்க, தொப்பி போன்ற எதையாவது அணியலாம்.

மருத்துவர் சிவராமன்

இதுதவிர, அதிகமாக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் அவசியமற்று வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருநாளைக்கு மூன்று முதல், நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம். வீடுகளில் மண்பானை வைத்து அதில் வெட்டிவேர் இட்ட தண்ணீரை வைத்துப் பருகுவது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இயற்கையான பழச்சாறுகள், பதநீர், இளநீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஆனால், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் மற்றும் பதநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பிரச்னையை உண்டாக்கும். தாகத்தைத் தணிப்பதற்கு என ஏரியேட்டடு பானங்கள் (Aerated drinks) பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளை பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

நீராகாரம்

இந்தக் காய்கறிகள், வயிற்றில் உள்ள புண்களையும் குணப்படுத்தும். உண்ணும் உணவில் அதிக காரம் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது, கோடை காலத்தில் ஏற்பட கூடிய செரிமானக் கோளாறுகளைக் குறைக்கும். இரவு உணவை கொஞ்சம் விரைவாக உட்கொள்வதும் கோடை காலத்தில் சிறந்தது. கோடைக்கு நீராகாரம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில், காலையில் நிறைய மோர் சேர்த்துப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மிகச் சிறந்த புரோபயாடிக் ஆகவும் இந்த உணவு உதவும்" என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...