Skip to main content

மீண்டும் தலைதூக்கும் `துப்பாக்கி கலாசாரம்' - அமெரிக்காவில் நடப்பது என்ன?!

11 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலிருக்கும் மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் கடந்த 21-ம் தேதி இரவு சீன புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இங்கு சீன வம்சாவளியினருக்குச் சொந்தமாக நடன விடுதி ஒன்று இருக்கிறது. இதில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிநவீன துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா

மேலும் பலர் படுகாயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி, (21-ம் தேதி) சனிக்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் ஆசிய-அமெரிக்க சமூகத்தின் மையமான இந்தப் பகுதியில் வன்முறை நடந்தது, இனரீதியாக தூண்டப்பட்டிருக்கலாம் என்ற கவலையை ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சந்தேகப்படும் வகையில் நின்ற வேன்

இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட காவல் அதிகாரிகள், "மர்ம நபர் பொதுமக்கள்மீது கண் மூடித்தனமாகச் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் சந்தேகப்படும் வகையில் வேன் ஒன்று நின்றது. அந்த வேனை சுற்றி வளைத்து நெருங்கியபோது, அந்த வேனிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.

வேனை திறந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் இறந்துகிடந்தார். அவர் 72 வயதான ஹூ கேன் டிரான் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர்தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

185 துப்பாக்கிச்சூடுகள் பதிவு

இந்தச் சம்பவம்தான், இந்தப் பகுதியில் இதுவரை நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு எனக் கூறப்படுகிறது. கடந்த 1984-ல் சான் டியாகோவிலுள்ள 'மெக்டொனால்டு' உணவகத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது கலிஃபோர்னியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மிகப்பெரிய உயிரிழப்பாகும்.

துப்பாக்கிச்சூடு

கடந்த 2015-ம் ஆண்டில், சான் பெர்னார்டினோவில், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களால் ஈர்க்கப்பட்ட தீவிரவாத தம்பதியால், 14 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பல மணி நேரம் கழித்து அவர்கள் கொல்லப்பட்டனர். 1966-2022-க்கு இடையில் 185 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியிருக்கின்றன" என்றனர்.

48 மணி நேரத்துக்குள்

கடந்தாண்டும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், இதே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் முடிந்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் கடலோர வடக்கு கலிஃபோர்னியா நகரமான 'ஹாஃப் மூன் பே'-வில் இருக்கும் காளான் பண்ணையில் கடந்த 23-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலிருக்கும் லாரி போக்குவரத்துச் சேவை நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கி

காரில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

இது தொடர்பாக சன்னி ஸாவோ (67) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரின் காரில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஏற்கெனவே சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி வன்முறைக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 21 நாள்களில் அமெரிக்காவில் 39 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட வெகுஜன துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `வெகுஜன துப்பாக்கிச்சூடு' என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச்சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த/கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.

100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள்

துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச்சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும். ஸ்விட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது. அமெரிக்காவில் 100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் என்ற விகிதம் மற்ற நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது.

கடந்த பல வருடங்களாக துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிப்ரவரியில் 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' நடத்திய ஓர் ஆய்வில், ஜனவரி 2019 - ஏப்ரல் 2021-க்கு இடையில் 7.5 மில்லியன் அமெரிக்க வயது வந்தோர் புதிய துப்பாக்கி உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். இதையொட்டி, 5 மில்லியன் குழந்தைகள் உட்பட 11 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் துப்பாக்கியால் தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் புதிய துப்பாக்கி உரிமையாளர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர்.

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

பொதுமக்களிடம் கருத்து கேட்பு

எனவே இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, 57% அமெரிக்கர்கள் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை விரும்புவதாகவும், 32% பேர் தாங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். 10% பேர் சட்டங்கள் குறைவாகக் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றுவதில் கட்சிகளுக்கு இடையேயும் முரண்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், "கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய ஒருமனதாக இருக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 91% கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மறுபுறம் இதை 24% குடியரசுக் கட்சியினரும், 45% சுயேச்சையினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்கள் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்ய அல்லது கண்டிப்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றன. சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஆனால் கலிஃபோர்னியா, எடுத்துக்காட்டாக, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் - கமலா ஹாரிஸ்

எதிர்ப்பது யார்?

தேசிய துப்பாக்கிச் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கி லாபியாக இருக்கிறது. இந்த அமைப்பு துப்பாக்கி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தடைசெய்வதற்கான சட்டத்தை இயற்றுமாறு அதிபர் பைடன் அமெரிக்க காங்கிரஸை வலியுறுத்தியிருக்கிறார். தடைக்கான அவரின் முறையீடு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் நிறைவேற்றப்பட்டதைப் போன்றது. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிட்டது .

ஜோ பைடன் இது தொடர்பாக தன்னுடைய அறிக்கையில், "அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறைக்கு வலுவான நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் அறிவோம். காங்கிரஸின் இரு அவைகளும் விரைவாகச் செயல்பட வேண்டும். இந்த தாக்குதல் ஆயுதத் தடையை எனக்கு உடனடியாக வழங்க வேண்டும். அமெரிக்க சமூகங்கள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவும் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...