Skip to main content

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்... தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தின் பின்னணி என்ன?!

சமீபகாலமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், கொலிஜியம் என்ற முறை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கென சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை நவம்பர் 22-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள்வரை இருக்க முடியும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஒருவர்கூட, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி வழங்கப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு” என்று சுட்டிக்காட்டியது.

அருண் கோயல்

மேலும், 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இந்த வழக்கு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ரானார். `தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த நவம்பர் 21-ம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற விவகாரத்தைக் கிளப்பினார்.

அப்போது, தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரின் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ``தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர், தலையாட்டுபவராக இருக்கக் கூடாது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, பா.ஜ.க தலைமையில் தற்போது மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், எட்டு ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தேர்தல்களின்போது தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கக்கூடிய ஒருவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தால், தங்கள் பிடிக்குள் இருக்க மாட்டார் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய வயதில் தேர்தல் ஆணையர்களை ஆட்சியாளர்கள் நியமிக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்திருப்பதை, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகக் கருத முடியாது. காரணம், மிகவும் ஆணித்தரமான கேள்விகளையே உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களும் நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை தங்கள் வசதிக்கு வளைத்துக்கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஒரு காலத்தில் சிம்மசொப்பணமாக விளங்கியவர் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். அவர், முழுமையாக ஆறு ஆண்டுகாலம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தார். உச்ச நீதிமன்றம் தங்கள் தலையில் கொட்டிய பிறகாவது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் வகையில் உரிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...