Skip to main content

`83% உயிரினங்களை அழிக்கும் மனிதன்; தாய்ப்பாலில் கலந்த பிளாஸ்டிக்' - பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கு

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவைகள் பற்றி பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பூவுலகின் நண்பர்கள் மற்றும் தொன் போஸ்கோ இணைந்து நடத்திய ``இளையோரும் காலநிலையும்" என்ற ஒருநாள் கருத்தரங்கத்தை அக்டோபர் 28-ம் தேதி சென்னை சாந்தோமில் நடந்தது. இதில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைத்துறை பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள்

`மனிதன் பூவுலகின் தாதா அல்ல!'

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், ``எந்த உயிரினமும் மனிதனைத் தேடி வருவதில்லை. ஆனால், நாம்தான் மற்ற உயிரினங்களில் வாழ்விடங்களை தேடிச்சென்று ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருக்கிறோம். யானைகள் வலசைப் போகும் காட்டுப்பாதைகளை மறித்து ரயில்வே, ஈஷா, காருண்யா என கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். நாம் எல்லோருக்கும் நாம்தான் இந்தப் `பூவுலகின் தாதா', இந்த இயற்கையை நம்மால் கட்டுப்படுத்தமுடியும் என தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இயற்கையோடு இயைந்து வாழ்வதைத்தவிர நம்மால் வெறெதுவுமே செய்துவிட முடியாது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐ.பி.சி.சி-யின் ஆறாவது அறிக்கை, 1986 பிப்ரவரிக்குப் பிறகு இந்த உலகத்தில் பிறந்த எந்தக் குழந்தையும் இதுவரை தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு இயல்பான மாதத்தைக்கூட பார்த்ததில்லை என அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது! இந்த காலநிலை மாற்றத்துக்கு எங்கள் தலைமுறையும் ஒரு காரணம் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இளைஞர்களே நாளை வாழப்போவது நீங்கள். இது உங்கள் பூமி. இனி உங்களால்தான் இதைக் காப்பாற்ற முடியும்!" என்றார்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

`கட்டடங்களை உண்டு வாழமுடியாது!'

மாடு கன்றுக்குட்டி கதையுடன் உரையைத் தொடங்கிய சுற்றுச்சூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ், ``We Cant't eat Infrastructure! நம்மால் இந்தக் கட்டடங்களையும், தொழில்நுட்பங்களையும் உண்டு வாழமுடியாது. இயற்கை இல்லையென்றால் நமக்கு உணவில்லை. குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம், உணவுகளை வீணாக்காமல் இருப்போம், மரங்களை வளப்போம்!' என்றார்.

சுப்ரியா சாகு, ஐ.ஏ.எஸ்

`தாய்ப்பாலிலும் பிளாஸ்டிக் கலந்துவிட்டது'

மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும்வகையில் பேச்சைத் தொடங்கிய மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்,``மண்ணுக்கும் தண்ணீருக்கும் வாசனை கிடையாது. அதிலுள்ள நுண்ணுயிர்களால்தான் மண்வாசனையே உண்டாகிறது. இனி அதுவும் இல்லாமல் போகுமளவுக்கு நுண்ணியிர்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மீனில் உப்பைக்கொட்டினால் அது காய்ந்து கருவாடாகும். அப்படித்தான் யூரியா, பொட்டாஸ் போன்ற வேதி உப்புக்களை விவசாயமண்ணில் கொட்டி மண்னை கருவாடாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நிலம் விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட்களுக்கு கைமாற்றப்படுகிறது. நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள், நாட்டு மீன்கள், நாட்டு விதைகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள், உருவாக்கப்பட்ட உயிரினங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நம்மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே நம் மண்ணுக்கும், நமக்கும் பேராபத்து. கடல் தொடங்கி, காவிரிநீர், நிலத்தடி நீர், தாய்ப்பால் வரைக்கும் `மைக்ரோ பிளாஸ்டிக்' நுழைந்துவிட்டது" என எச்சரித்தார்.

பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்

`மனிதனின் முக அமைப்பே மாறிவிடும்!'

நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன், ``இந்த உலகத்தில் வெறும் 0.01% மனிதர்கள்தான் இருக்கிறோம். ஆனால், உலகின் 83% உயிரினங்களை நாம் மட்டுமே அழித்துக்கொண்டிருக்கிறோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 50% கடல்தான் கொடுக்கிறது. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் 20 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் தூக்கி எரிந்துகொண்டிருக்கிறோம். அதில், 80% கடலுக்குத்தான் செல்கிறது. இன்னமும் மின்சாரம், எரிசக்தி தேவைக்காக 60% கார்பன் கரியை எரித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் தற்போது 3.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுஇப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் மனிதனின் முக அமைப்பே வித்தியாசமாக மாறிவிடும்!" என அதிர்ச்சி தெரிவித்தார்.

பேராசிரியர் ஜனகராஜன்

`ஆரோக்கியம் சீரழிந்துவிட்டது!'

தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் நாகராஜன், ``காலநிலை மாற்றத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் கொரோனா. அதிகரிக்கும் வெப்பநிலை, தவறி பெய்யும்  மழையால் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முழுக்காரணம் மனிதனின் சுயநலம்தான். மனிதன் செய்யும் தவற்றுக்கு இயற்கை திருப்பி அடிக்கிறது" என குற்றம்சாட்டினார்.

தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் நாகராஜன்

அதேபோல சித்த மருத்துவர் கு.சிவராமன், ``இன்றைய சூழ்நிலையில் 15 வயது சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய், கர்ப்பிணிக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறதென்றால் காலநிலையும், உணவுமுறையும் அந்தளவுக்கு மாறிக்கிடக்கிறது. ஒரு நூடுல்ஸை 2 நிமிடத்தில் சாப்பிட்டுவிடலாம், ஆனால் அதன் பிளாஸ்டிக் கவர் மக்குவதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளாகும் என்பதை யாரும் யோசிப்பதில்லை" என வேதனை தெரிவித்தார்.

இயற்கை சார்ந்த பாடலுடன் உரையைத் தொடங்கிய ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, ``இந்த நிலம் எனக்குச் சொந்தம் எனக் கூறுபவர்கள் யாரும் அதன் பாதுகாப்பிற்கு உழைக்கவில்லை. நிலமற்ற எளிய மக்களே சூழலைப் பாதுகாத்து வந்தனர். நாமும் அப்படியே சூழல் பாதுகாப்பிற்கு உழைக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு

`நெடுவாசலில் போராடியதால்தான், அமைச்சர் பொறுப்பு வந்தது!'

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் அமைச்சர் சி.வி. மெய்யநாதன், ``ஒட்டுமொத்த உலகத்துக்கும், ஒரேயொரு இயற்கைதான், ஒரேயொரு பூமிதான். ஓர் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது இன்னொரு இடத்தையும் பாதிக்கும். நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாகவே வழிபட்டனர், பாதுகாத்தனர். அதனால் இயற்கை அவர்களை வாழவைத்தது. ஆனால், நாம் இன்று இயற்கையை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தீபாவளியால் மிகக் கடுமையான காற்றுமாசுபட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தோம். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 2004-ல் சுனாமி, 2015-ல் பெருவெள்ளம், கஜா, ஒகி புயல், தற்போது தெலங்கானா, உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, பெங்களூர், பாகிஸ்தானில் பெருவெள்ளம் போன்ற பாதிப்புகளை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுற்றுச்சூழல் அமைச்சர் சி.வி. மெய்யநாதன்

மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தாலும், மக்கள் அதை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். அதனால், மீண்டும் `மஞ்சள் பை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார். 10 ஆண்டுகளில் 20 கோடி மரங்களை நட திட்டமிட்டிருக்கிறார். தற்போது, தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை உருவாக்கியிருக்கிறார். மேலும், 2017-ல் எனது ஆலங்குடி தொகுதியிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஒன்றிய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்தபோது, மறுநாளே அந்த கிராமத்துக்குச் சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்து போராடினேன். அதை கருத்தில்கொண்டுதான் என்னை சுற்றுச்சூழல்துறை அமைச்சராக்கியிருக்கிறார் முதல்வர். நம் தமிழ்நாடு இந்தியாவுக்கே சமூக நீதி கருத்துக்களை எடுத்துச்சென்றதைபோல, சூழலியல் கருத்துகளையும் நாடெங்கும் பரப்பும்வகையில் நாம் செயல்படுவோம்!"  என உறுதியளித்தார்.

புத்தர் கலைக்குழு

புத்தர் கலைக்குழுவினரின் பறை நிகழ்ச்சி, பல்வேறு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் மற்றும் உறுதிமொழியேற்புடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...