Skip to main content

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக களமிறங்கும் திருமாவளவன் - ஊர்வலத்துக்கு தடை கோருவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளிட்டோர் பேரணிக்கு எதிராகக் கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இப்படி, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள் ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணியை எதிர்ப்பது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த மனு மீது முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ​​காவல்துறை தரப்பில், `ஊர்வலம் எந்தப் பாதையில் செல்கிறது எனத் தெரிவிக்கப்படவில்லை. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது. காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும். இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் எங்களிடம் தாக்கல் செய்யவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், `ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருப்பதால், அவர்கள் செல்லும் வழியைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த விதிகளைப் பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும்' என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

மனுதாரர்கள் தரப்பில், `பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது, இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது. ஊர்வலத்தைக் காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் ஆனால், அனுமதி மறுக்க முடியாது. தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், `பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல, நாங்கள் சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயார்' என்றும் மனுதாரர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அணிவகுப்புக்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணிக்கெதிரான எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. “ஜனநாயகம் என்னும் பெயரில் சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் மதவெறி அரசியலை விதைக்க முனைந்திருக்கிறார்கள். இதற்கு நீதிமன்ற அமைப்புகளே துணை போவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இத்தகைய பிரச்னைகளைக் கவனிக்க வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

``ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதிப்பது மத நல்லிணக்கத்துக்கு பேராபத்து'' என நாம் தலைவர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ``தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணை போக வேண்டாம்'' என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணியும் கருத்துத் தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ``ஆர்.எஸ்.எஸ். பேரணி மூலம் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலலூன்ற முயற்சி செய்கின்றனர். அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது'' எனக் கூறியிருந்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எஸ்.எஸ்.பாலாஜி

இந்தநிலையில், ``ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணியை எதிர்ப்பது ஏன்?'' என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம்..,

``அரசியல் ரீதியாக எதிர்கொள்கைகளை உடையவர்கள் ஆயினும் பாஜக ஜனநாயகப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. அவர்கள் பேரணி நடத்தினால்கூட அவர்களைக் கட்டுப்படுத்த ஒரு கட்சி கட்டமைப்பு இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொறுத்தவரை வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்பு. யார் அமைப்பில் இருக்கிறார்கள், யார் எந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற கட்டமைப்பு வெளியில் தெரிவதில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸில் உள்ள ஒரு நபரால் பிரச்னை ஏற்பட்டு வெளியில் தெரிந்துவிட்டால், குறிப்பிட்ட நபர் எங்களின் அமைப்பினரே இல்லை என்று சொல்லிவிடுவார்கள். காந்தியைக் கொன்ற கோட்சே காலத்திலிருந்து அதுதான் நடந்துவருகிறது. அதனால் மற்ற அமைப்புகளைப்போல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பார்க்கமுடியாது. அவர்கள் வித்தியாசமான முறையில் இயங்குவதால், ஆபத்துகள் அதிகம் உண்டு.

அடுத்ததாக, காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் இரண்டாம் தேதியைத் தேர்ந்தெடுத்து பேரணி நடத்துவதே உள்நோக்கம் கொண்டது. அம்பேத்கரின் பிறந்தநாளை மறைப்பதற்காக, பாபர் மசூதியை இடித்தார்கள் என்கிற குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறோம். அந்த அடிப்படையில்தான் இதையும் பார்க்கிறோம். ஜனநாகயத்தில் ஊர்வலம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஜனநாயக ரீதியாக செயல்படக்கூடிய அமைப்பல்ல ஆர்.எஸ்.எஸ். இப்போதிருக்கும் இந்தியக் கட்டமைப்புக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குமே அவர்கள் எதிரானவர்கள். அவர்கள், ஜனநாயக ரீதியில் ஒரு பேரணி நடத்துவோம் என்று சொல்வது சந்தேகமாக இருக்கிறது. அதனால்தான் அதற்குத் தடை கோருகிறோம்'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

`ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணிக்கெதிராக தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை முன்வைக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை' என்கிற குற்றச்சாட்டுக்களை திமுக அரசின்மீது சிலர் முன்வைத்துவருகின்றனர்.

இதுகுறித்து, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்..,

``அரசு முறைப்படி வாதங்களை எடுத்து வைத்ததால்தான், நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதனால், சாதாரணமான ஒரு ஊர்வலமாகத்தான் இது நடக்கமுடியும். அதேநாளில், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பேரணிக்குத் திட்டமிட்டுள்ளன. இரண்டு பக்கமும் ஒரே நாளில் பேரணி நடத்துவதன் மூலம் ஏதாவது பதற்றம் உண்டாகும் என அரசு கருதினால், பேரணிக்குத் தடை விதிக்கவேண்டிய சூழல் வரலாம். கூட்டணிக் கட்சிகளுக்கு பேரணி நடத்த உரிமை இருக்கிறது அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் பழைய வரலாறுகளைப் பார்த்தால், விடுதலைச் சிறுத்தைகள் தெரிவிக்கும் கருத்துகள் சரியானவைதான்'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி

பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இதுகுறித்துப் பேசினோம்..,

``ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு கட்டுக்கோப்பான, ஒழுக்கமான அமைப்பு. நீதி, நேர்மை, நியாயம், கலாசாரம், பண்பாடு குறித்து போதிக்கும் தேசபக்தி இயக்கம். அதனால் ஆர்.எஸ்.எஸ் எதைச் செய்தாலும் திருமாவளவனும், கம்யூனிஸ்டுகளும் எதிர்ப்பதில் ஒன்றும் வியப்பில்லை. நீதிமன்றம் ஊர்வலத்துக்கு அனுமதியளித்திருக்கிறது. மிகச்சிறப்பாக அது நடைபெறும்'' என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...