Skip to main content

IND v PAK: பலே பாண்டியா; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! அந்தச் சிக்கலான விதிமுறையைக் கவனித்தீர்களா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை டி20 போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது.

இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் வாங்கிய அடிக்குச் சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது.

நேற்றையப் போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிங்கிளைத் தவிர்த்திருப்பார். எதிர்முனையில் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் ஏமாற்றமுற, 'நான் பார்த்துக்குறேன்' என்பது போல ஹர்திக் பாண்டியா கண்ணசைத்திருப்பார். அதற்கடுத்த பந்தையே பெரிய சிக்ஸராக்கிச் சொன்னதை போலவே ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். சொல்லப்போனால் கடைசி ஓவரில் மட்டுமில்லை. நேற்றைய போட்டி முழுவதுமே 'ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் பார்த்துக்குறேன்' என்கிற மோடில்தான் ஹர்திக் பாண்டியா சுற்றித்திரிந்தார். பௌலிங்கில் முக்கியமான கட்டத்தில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள். பேட்டிங்கில் ஏறக்குறைய 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கடைசி ஓவர் ஃபினிஷிங். இதுபோக அவரின் வழக்கமான ஃபீல்டிங் மாயாஜாலங்கள் வேறு. எல்லாவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்காக இருந்தார்.

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் பெரும்பாலும் ஸ்கோரை சேஸிங் செய்யும் அணிகளே வெல்லும். அதற்கேற்ற வகையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்று ஃபீல்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் அணி பேட்டிங். பாபர் அசாமும் ரிஸ்வானும் ஓப்பனர்களாக வந்தனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக இருவரும் நின்று ஆடி விக்கெட்டே விடாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெல்ல வைத்திருந்தனர். அதேமாதிரியான ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் பொருட்டே இருவரும் தங்களின் வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடங்கினர்.

Bhuvaneswar Kumar

இவர்களை இருவரையுமே சீக்கிரம் வீழ்த்துவதுதான் இந்திய அணியின் முதல் நோக்கமாக இருந்தது. இந்திய அணியின் முயற்சிக்கு பாபர் அசாம் இரையானார். புவனேஷ்வர் குமார் தனது முதல் ஸ்பெல்லிலேயே பாபர் அசாமை வெளியேற்றினார்.

நல்ல வேகத்தில் புவனேஷ்வர் குமார் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியை ஃபைன் லெக்கில் பெரிய ஷாட்டாக்க முயன்று பாபர் அசாம் 10 ரன்களில் கேட்ச் ஆகியிருந்தார். ஷார்ட் ஃபைன் லெக் வட்டத்திற்குள் நின்றதால் எளிதில் ஃபீல்டை க்ளியர் செய்து பவுண்டரியாக்கிவிடலாம் என்கிற பாபர் அசாமின் கணக்கு பிழையாகிப் போனது. ஆனால், பாபர் அசாமின் இந்த விக்கெட்தான் இந்திய அணிக்கான ப்ளூ ப்ரிண்ட்டாகவும் மாறியது.

தொடர்ச்சியாக வலுவான ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை வீசி பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். ஆவேஷ் கான் ஒரு ஷார்ட் பாலில் ஃபகர் ஜமானை எட்ஜ் எடுத்தார்.

ஹர்திக் பாண்டியா வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கிடைத்தவைதான். 142, 141, 139 கி.மீ ஹர்திக் விக்கெட் வீழ்த்திய மூன்று பந்துகளின் வேகப்பட்டியல் இது.
Hardik Pandya

நல்ல வேகத்தில் ஷாட் ஆடுவதற்கான இடத்தைக் கொடுக்காமல் பேட்ஸ்மேன் மீது மோதுவது போல வீசி திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஸ்வான், இஃப்திகார், குஷ்தில் இவர்கள் மூவருமே ஹர்திக்கின் ஓவரில் அவுட் ஆகினர். இதில் ரிஸ்வானின் விக்கெட் ரொம்பவே முக்கியமானது. நன்றாக செட்டில் ஆகி நின்று 43 ரன்களை அடித்திருந்தார். அவர் கடைசி வரை நின்றிருந்தால் பாகிஸ்தான் ஒரு சவாலான ஸ்கோரையே எடுத்திருக்கும். ஹர்திக் அதைத் தடுத்தார்.

13 மற்றும் 15 இந்த இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சீராக முன்னேறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் நிலைகுலைந்து போனதும் இங்கேதான்.

முக்கியமான விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்திக் கொடுக்க அடுத்தக்கட்ட விக்கெட்டுகளை புவனேஷ்வரும் அர்ஷ்தீப்பும் மளமளவென வீழ்த்தினர். 19.5 ஓவர்களில் 147 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணிக்கு 148 ரன்கள் டார்கெட். எளிய டார்கெட்தான். ஆனால், இந்திய அணியின் சேஸிங் அத்தனை எளிதாக அமையவில்லை. அறிமுக வீரர் நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஸ்டம்புகள் தெறிக்க டக் அவுட் ஆனார். கோலியும் ரோஹித்தும் திணறித்திணறி முன்னேற முயன்றனர். அவர்களுமே ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றினர். டி20 போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித்தின் சமீபத்திய ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் இருவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக கடுமையாகத் திணறுகிறார்கள். இடதுகை ஸ்பின்னரான நவாஸின் அடுத்தடுத்த பந்துகளில் ரோஹித்தும் கோலியும் ஒரே மாதிரியாக பெரிய ஷாட்டுக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆகினர்.

நவாஸை சமாளிப்பதற்காக ஜடேஜா, சூர்யகுமார் யாதவிற்கு முன்பாக இறக்கப்பட்டார். இது ஓரளவுக்கு பலனளித்தது. ஜடேஜா கடைசி ஓவர் வரை நின்றார். எப்படியாயினும் ஆட்டத்தை அதிரடியாக இந்தியா பக்கம் திருப்பியது ஹர்திக்தான். ஹரிஷ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை ஹர்திக் அடித்திருந்தார். இது கடைசி ஓவருக்கான அழுத்தத்தைக் குறைத்தது. ஸ்பின்னரான நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே ஜடேஜா போல்டானார். ஆனாலும், ஹர்திக் விடவில்லை.

Hardik Pandya
தினேஷ் கார்த்திக் சிங்கிள் தட்டிக் கொடுக்க வின்னிங் ஷாட்டாக மிட் விக்கெட்டில் ஒரு பெரிய சிக்ஸரைப் பறக்கவிட்டு வெற்றியைத் தேடித்தந்தார். 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகவும் இருந்தார்.

சதி செய்த விதிமுறை

வீரர்களைத் தாண்டி விதிமுறை ஒன்றும் நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே பந்துவீசுவதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் இரு அணிகளின் பந்துவீச்சின் போதுமே கடைசி சில ஓவர்களில் வட்டத்திற்குள் கூடுதலாக ஒரு ஃபீல்ட்ரை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் டெத் ஓவர்களில் அவுட் ஃபீல்டில் வழக்கத்தை விட ஒரு ஃபீல்டர் குறைவாக 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருந்தனர். இந்த 'Slow over rate penalty'-யால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அதிகமாக பாதித்க்கப்பட்டது. காரணம், ஹர்திக். அவர் க்ரீஸில் இருந்த கடைசிக்கட்ட ஓவர்களில் பாகிஸ்தான் அவுட் ஃபீல்டில் ஒரு ஃபீல்டரைக் குறைவாகவே வைத்திருந்தது. இதனால் ஹர்திக்கால் ஒன்றிரண்டு பவுண்டரிகளை எளிதில் அடிக்க முடிந்திருந்தது. இந்த பெனால்டி இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாகியிருக்கும்.

Hardik Pandya
எதிர்பார்த்தபடியே ஹர்திக் பாண்டியாவிற்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `கடைசி ஓவரில் 15 ரன்களைக் கூட அடித்திருப்பேன்' என ஹர்திக் நம்பிக்கையோடு கூறியிருந்தார். ஆக, அந்த பெனால்டி சௌகரியம் வாய்க்காமல் போயிருந்தால் கூட ஹர்திக் சம்பவம் செய்திருப்பார். பலே பாண்டியா!

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...